நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி எரிவாயுமயமாக்கல் திட்டங்களுக்கு ஊக்கம்

Posted On: 26 JUL 2024 3:53PM by PIB Chennai

இந்தியாவில் பரந்து விரிந்து கிடக்கும்  378 பில்லியன் டன் அளவுள்ள நிலக்கரி சுரங்கங்களில், 199 பில்லியன் டன்  உயர் ரகத்தைச் சேர்ந்தது என்பதால், எரிசக்தி உற்பத்திக்கான வாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளன. இந்த நாடு தூய்மையான எரிசக்தி திட்டங்களைப் பின்பற்றி வரும் நிலையில், புதுப்பிக்கத்தக்க வளங்கள் உத்வேகம் பெற்றுள்ளன. எனவே, நிலையான நிலக்கரி பயன்பாட்டை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

2020-ல் தொடங்கப்பட்ட நிலக்கரி எரிவாயுமயமாக்கல் திட்டத்தின்படி, 2030-க்குள் 100 மில்லின் டன் நிலக்கரியை எரிவாயுவாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, 2027-க்குள் எரிசக்தி துறையில் சுதந்திரம் அடைவதற்கான இலக்கை அடைய உறுதுணையாக இருக்கும்.

நிலக்கரி எரிவாயுமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்த,  கோல் இந்தியா நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் மற்றும் இந்திய எரிவாயு ஆணையத்துடன் இணைந்து, புதிய கூட்டாண்மை நிறுவனத்தைத்  தொடங்க,  பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில், 4050 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் துறை, பொதுத்துறை கூட்டு நிறுவனங்களுக்கு 3850 கோடி ரூபாயும், ஊக்க நிதி வழங்குவதற்காக 1000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டாண்மை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் லிக்னைட்டிலிருந்து மெத்தனால் எடுக்கும் திட்டத்தின் மூலம், சின்கேஸ், டீசல், பசுமை ஹைட்ரஜன் போன்ற பசுமை எரிசக்தி பொருட்களை தயாரிக்கும் என  மத்திய நிலக்கரி துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2037489

***

MM/RS/KR/DL



(Release ID: 2037641) Visitor Counter : 44