ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம்

Posted On: 26 JUL 2024 2:38PM by PIB Chennai

கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்தல், கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளித்தல், கிராமப்புற  இளைஞர்களுக்கு  சமூக பாதுகாப்பு வளைய திறன் பயிற்சி அளித்தல், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வாயிலாக, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்- கிராமப்புறம், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம், தேசிய சமூக உதவி திட்டம்  மற்றும் பிரதமரின் வேளாண் பாசனத்திட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி மேம்பாட்டுத் தொகுப்பு திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டங்களுக்கு மாநில வாரியாக, திட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பயன்பாட்டு விவரம் வருமாறு:

  1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் எஸ்சி பிரிவைச் சேர்ந்த 655.09 லட்சம் குடும்பங்களும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த 547.09 லட்சம் குடும்பங்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
  2. தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், ஜூன் 2024 வரை எஸ்சி பிரிவைச் சேர்ந்த 1,97,45,021 குடும்பங்களும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த 1,22,32,174 குடும்பங்களும், சிறுபான்மை  இனத்தைச் சேர்ந்த 80,04,414 குடும்பங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்று, சுய உதவிக் குழுக்களைப் பொறுத்தவரை, எஸ்சி பிரிவைச் சேர்ந்த 17,88,155 குழுக்களும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த 11,20,624  குழுக்களும், சிறுபான்மை  இனத்தைச் சேர்ந்த 6,88,057 குழுக்களும்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  3. பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்- கிராமப்புற திட்டத்தின் கீழ், எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 68,58,151 வீடுகள் கட்ட அனுமதியளிக்கப்பட்டு, இதில் 59,06,403 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஸ்டி பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்ட 65,89,252 வீடுகளில்  57,21,852 வீடுகளும், சிறுபான்மையினருக்கான 35,51,510 வீடுகளில்  33,48,652 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  4. பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், 2024, ஜூலை 22 வரை மொத்தம் 8,27,419 கி.மீ தொலைவுக்கான சாலைப்பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, 7,65,512 கி.மீ தொலைவுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பழங்குடியினர் 100 பேர் வரை வசிக்கக்கூடிய குடியிருப்புகளுக்கு இணைப்பு வசதி ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 5 ஆண்டுகளில் 8 ஆயிரம் கி.மீ தொலைவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 2,813.11 கி.மீ தொலைவுக்கான சாலைகள்  பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்டுள்ளன.
  5. தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், எஸ்சி பிரிவைச் சேர்ந்த 2,75,693 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, 1,83,160 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதேபோன்று எஸ்டி பிரிவைச் சேர்ந்த 1,55,168 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 1,06,344 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களில் 2,29,282 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 1,63,804 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
  6. தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ், எஸ்சி பிரிவைச் சேர்ந்த 56,62,755 பேரும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த 29.89,376 பேரும் பயனடைந்துள்ளனர்.
  7. பிரதமரின் வேளாண் பாசனத்திட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ், 2 ஆண்டுகளில்  1,05,009 தண்ணீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன/ புனரமைக்கப்பட்டு 1,46,659 ஹெக்டர் நிலங்களுக்கு பாதுகாக்கப்பட்ட  பாசன வசதி அளிக்கப்படுகிறது. மேலும் 84,679 ஹெக்டர் நிலங்கள் தோட்டக்கலை (காடு வளர்ப்பு/ தோட்டக்கலை) திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 7,06,066 விவசாயிகள் பயனடைந்திருப்பதுடன், 1,27,31,044 மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2037409

***

MM/RS/KR/DL



(Release ID: 2037619) Visitor Counter : 39


Read this release in: English , Hindi , Hindi_MP , Manipuri