சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சகம், சண்டிபுரா தொற்று குறித்து நிபுணர்களுடன் ஆய்வு
Posted On:
20 JUL 2024 8:09PM by PIB Chennai
குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பரவியுள்ள சண்டிபுரா தொற்று குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவை தலைமை இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) அதுல் கோயல், எய்ம்ஸ், கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள், மத்திய மற்றும் மாநில கண்காணிப்பு பிரிவுகளின் அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வு செய்தார்.
குஜராத்தில் பதிவான தீவிர மூளை பாதிப்புகள் குறித்து விரிவான தொற்றுநோயியல், சுற்றுச்சூழல் மற்றும் பூச்சியியல் ஆய்வுகளின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
குஜராத் மாநிலத்திற்கு உதவுவதற்காக தேசிய நோய் கட்டுப்பாடு மையம், ஐசிஎம்ஆர் மற்றும் டிஏஎச்டி ஆகியவற்றிலிருந்து பல்துறை சார்ந்த மத்திய குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடுமையான மூளையழற்சி நோய்க்குறி என்பது பல்வேறு வைரஸ்கள், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள், ஸ்பைரோகீட்கள், இரசாயன / நச்சுகள் போன்றவற்றால் ஏற்படும்
தொற்று ஆகும்.
சண்டிபுரா வைரஸ் என்பது ராப்டோவிரிடே குடும்பத்தின் உறுப்பினராகும், இது நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில், குறிப்பாக மழைக்காலங்களில் பரவுவதாக அறியப்படுகிறது. இது மணல் ஈக்கள் மற்றும் உண்ணி போன்ற நோய்பரப்பிகள் மூலம் பரவுகிறது.
நோய்பரப்பி கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை மட்டுமே நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நோய் பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. காய்ச்சல் நோயுடன் காணப்படும் இது சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும்.
ஜூலை 20, 2024 நிலவரப்படி, மொத்தம் 78 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் குஜராத்தில் உள்ள 21 மாவட்டங்கள்/மாநகராட்சிகளில் இருந்து 75, ராஜஸ்தானில் இருந்து 2, மத்தியப் பிரதேசத்திலிருந்து 1. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். என்.ஐ.வி புனேவில் பரிசோதிக்கப்பட்ட 76 மாதிரிகளில், 9 பேருக்கு சந்திபுரா வைரஸ் (சி.எச்.பி.வி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
*****
PKV/DL
(Release ID: 2034776)