பாதுகாப்பு அமைச்சகம்
"நமக்கும் சமூகத்திற்கும் யோகா" : இந்திய ராணுவம் 10வது சர்வதேச யோகா தினம் கொண்டாடியது
Posted On:
21 JUN 2024 12:00PM by PIB Chennai
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் காலவரம்பற்ற நடைமுறையைக் கொண்டாடும் வகையில், இந்திய இராணுவம் நமது நாடு முழுவதும் 10வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பணியாற்றும் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள், முன்னாள் வீரர்கள், என்.சி.சி கேடட்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். வடக்கே சியாச்சின் பனிமலை (லடாக் யூனியன் பிரதேசம்) முதல் கன்னியாகுமரி (தமிழ்நாடு) மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வரை நிறுத்தப்பட்டுள்ள வீரர்கள் யோகா செய்தனர். மேற்கில் லோங்கேவாலா (ராஜஸ்தான்) மற்றும் கட்ச் (குஜராத்) பகுதிகளிலிருந்து கிழக்கில் கிபிது (அருணாச்சல பிரதேசம்) மற்றும் இம்பால் (மணிப்பூர்) மலைப்பாங்கான பகுதிகள் வரை இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.
பண்டைய நகரமான மதுராவில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவும் இதில் கலந்து கொண்டார்.
டெல்லியில், சர்வதேச யோகா தினம், டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் கொண்டாடப்பட்டது, அங்கு பணியில் உள்ள இந்திய இராணுவ வீரர்கள், நட்பு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் என்.சி.சி கேடட்கள் பங்கேற்றனர். டெல்லியில் நடைபெற்ற யோகா பயிற்சிக்கு ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமை தாங்கினார்.
இந்தியாவைத் தவிர, உலகெங்கிலும் உள்ள ஐநா தூதரகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து இந்திய ராணுவக் குழுக்களும் சர்வதேச யோகா தினத்தை அனுசரித்தன. இதில், உள்ளூர் மக்கள் திரளாக பங்கேற்றனர்.
ராணுவ பாராலிம்பிக் முனையில் ராணுவத்தின் பாரா தடகள வீரர்கள், ராணுவ சிறுவர்/சிறுமியர் விளையாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த கேடட்களும் சர்வதேச யோகா தினத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பங்கேற்றனர். ஆயுஷ் அமைச்சகத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுவான யோகா நெறிமுறைக்கு கூடுதலாக தியான பயிற்சிகளை நோக்கிய சிறப்பு யோகா அமர்வுகளில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர்.
எல்லையோர கிராமங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட உள்ளூர் மக்களும் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் நிபுணத்துவம் வாய்ந்த யோகா பயிற்றுவிப்பாளர்கள் இணைக்கப்பட்டனர், அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு உடல் தகுதி, மன அமைதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு 'ஆசனங்கள்' மற்றும் சுவாச பயிற்சிகளை செய்ய வழிகாட்டினர். இந்த ஆண்டின் மையகருத்தான "நமக்கும், சமூகத்திற்குமான யோகா", என்பது கொண்டாட்டங்களில் எதிரொலித்தது, அனைத்து பணியாளர்களும் தேசத்திற்கு சேவை செய்வதில் தங்கள் உறுதிப்பாடு மற்றும் பொறுப்புகளை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வு பாரம்பரிய நடைமுறையின் உலகளாவிய கொண்டாட்டத்தின் ஒரு தசாப்தத்தைக் குறிப்பதாக இருந்தது. இது உடல், மனது மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு வழங்கும் பலன்கள் காரணமாக உலகம் முழுவதும் அதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
யோகா என்பது பண்டைய இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு, இது மனதுக்கும், உடலுக்கும் இடையிலான நல்லிணக்கத்தில் கவனம் செலுத்துகிறது. இந்திய ராணுவம் பாரம்பரியமாகவே யோகாவின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளதுடன், வழக்கமான உடற்பயிற்சி குறித்த பாடத்திட்டத்திலும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய ராணுவம், ஒரு பொறுப்புள்ள அமைப்பாக, யோகா மூலம் நல்ல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும், ஆரோக்கியத்தையும் பரப்பி வருகிறது.
***
(Release ID: 2027310)
SRI/MM/RS/RR
(Release ID: 2027471)