சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனத்தைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பார்வையிட்டார்
Posted On:
20 JUN 2024 6:25PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனத்தைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பார்வையிட்டார். அப்போது மாற்றுத்திறனாளி சிறார்களை சந்தித்ததுடன் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிறுவனத்தின் தோட்டத்தில் அவர் மரக்கன்றுகள் நட்டார். இந்த நிகழ்வில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இத்துறையின் இணையமைச்சர் திரு பி எல் வர்மா, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கைக் கால்கள் தயாரிப்பது பற்றி அவர் கேட்டறிந்தார். பலவகை மாற்றுத்திறனை முன்கூட்டியே கண்டறிவதற்கான மையத்தையும் பார்வையிட்ட அவர், அங்கு சிகிச்சை பெறும் சிறார்களுடன் கலந்துரையாடினார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் திருமதி முர்மு, சுகம்யா பாரத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளைப் பாராட்டினார். அரசின் பல்வேறு திட்டப்பயன்களை மாற்றுத்திறனாளிகள் பெறுகின்ற வகையிலான தனித்துவ அடையாள அட்டைகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை ஆக்கப்பூர்வ மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு சிறந்த முறையில் பணியாற்றும் இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மாற்றுத்திறனாளிகளுக்கான தற்சார்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் அவர்களை மைய நீரோட்டத்தில் இணைப்பது அரசின் இலக்கு என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027141
***
AD/SMB/KPG/DL
(Release ID: 2027177)