தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘இணையத் தொடர்கள் / ஓடிடி தளங்கள் – ஆவணப்படங்களுக்குப் பிடிபடாதவை’ என்பது குறித்து மும்பை திரைப்பட விழாவில் குழு விவாதம்
Posted On:
19 JUN 2024 6:08PM by PIB Chennai
‘இணையத் தொடர்கள் / ஓடிடி தளங்கள் – ஆவணப்படங்களுக்குப் பிடிபடாதவை’ என்பது குறித்து 18-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் ஆழமான குழு விவாதம் நடைபெற்றது. ஆவணப்படத் தயாரிப்பாளர்களால் எதிர்கொள்ளப்படும் சவால்களை இந்த அமர்வு கண்டறிந்ததுடன் ஆவணப்படத் தயாரிப்பளார்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதில் ஓடிடி தளங்களின் பங்கு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது
குழு விவாதத்தில் தேசியத் திரைப்பட விருது பெற்றவரும், ஒளிப்பதிவாளரும், கேரள மாநிலத் திரைப்பட மேம்பாட்டுக்கழகத் தலைவருமான ஷாஜி என் கருண், பேராசிரியர் கே ஜி சுரேஷ், தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்து, மென்பொருள் சந்தைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு நிபுணர் ரத்தன் ஷார்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சன்ஸ்கார் தேசாய் விவாதத்தை ஒருங்கிணைத்தார்.
கேரளாவில் ஓடிடி தள அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷாஜி என் கருண், பார்வையாளர்களுக்கு தங்களின் படைப்புகளைக் கொண்டு செல்ல ஆவணப் படத் தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பொழுதுபோக்குத் துறையில் ஓடிடி தளம் ஒரு புரட்சி என்று குறிப்பிட்ட பேராசிரியர் கே ஜி சுரேஷ், இந்தத் தளம் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, பரவலாக்கப்பட்டுள்ளது என்றும், பொழுது போக்கு அம்சங்களை எளிதாக கொண்டு செல்வது என்றும் கூறினார்.
வி சாந்தாராம் சாதனையாளர் விருது பெற்ற சுப்பையா நல்லமுத்து, ஓடிடி தளத்தில் ஆவணப்படத் தயாரிப்பாளர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி எடுத்துரைத்தார். வணிகமயம் காரணமாக ஆவணப் படங்களை, விருது பெற்ற படங்களைக் கூட வாங்குவதற்கு ஓடிடி தளங்கள் விரும்புவதில்லை என்று குறிப்பிட்டார்.
மென்பொருள் சந்தைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு நிபுணர் ரத்தன் ஷார்தா, ஆவணப்படங்களுக்கு என்று தனியான ஓடிடி தளத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். இத்தகைய தளம் திரைத்துறைத் தொடர்புகள் இல்லாமல் புதிதாக வருவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2026663)
AD/SMB/KPG/RR
(Release ID: 2027043)
Visitor Counter : 72