பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து ஐ.ஐ.சி.ஏ., எம்.சி.ஏ ஆகியவை 'இந்தியாவில் பொறுப்பான வர்த்தக நடத்தை' என்ற தலைப்பில் அமைச்சகங்களுக்கு இடையேயான பயிலரங்கை நடத்தின
Posted On:
21 MAY 2024 9:53PM by PIB Chennai
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து இந்தியப் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமும், இந்தியப் பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனத்தின் (ஐ.ஐ.சி.ஏ) வணிகச் சூழல் பள்ளியும் 'இந்தியாவில் பொறுப்பான வர்த்தக நடத்தை' என்ற தலைப்பில் அமைச்சகங்களுக்கு இடையேயான பயிலரங்கை புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தன. பொறுப்பான வர்த்தகத்துடன் இணைந்த பல்வேறு அமைச்சகங்களின் கொள்கைகளை இணைத்தல், பொறுப்பான வர்த்தகம் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ளுதல், கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை விவாதித்தல், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் பொறுப்பான வர்த்தகம் தொடர்பான முன்முயற்சிகளை ஆவணப்படுத்துவதற்கான உள்ளீடுகளைப் பெறுதல் ஆகியவை இந்தப் பயிலரங்கின் நோக்கங்களாகும்.
பயிலரங்கில் சிறப்புரையாற்றிய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி அனுராதா தாக்கூர், நாட்டில் பொறுப்பான வர்த்தக நடத்தையை ஊக்குவிப்பதில் ஐ.ஐ.சி.ஏ ஆற்றிய பங்கை எடுத்துரைத்தார். தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்கை அடைவதற்குப் பொறுப்பான வணிக நடத்தையின் முக்கியத்துவத்தை திருமதி தாக்கூர் வலியுறுத்தினார். இந்தியாவில் பொறுப்பான வணிக நடத்தை சூழலியலின் பரிணாம வளர்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அமித் குமார் கோஷ் தனது உரையில், மாற்றுத்திறனாளிகள் முதல் திருநங்கைகள் வரையிலான சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் அரசின் பங்கை எடுத்துரைத்தார். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நமஸ்தே திட்டத்தின் முக்கியத்துவத்தை திரு குமார் வலியுறுத்தினார்.
பொறுப்பான நிதி நடைமுறைகளை உறுதி செய்வதில் நிதி அமைச்சகம் வகிக்கும் பங்கை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கணக்குக் கட்டுப்பாட்டு ஜெனரல் திரு ஷியாம் எஸ் துபே எடுத்துரைத்தார். நிதி வழங்கலில் வெளிப்படைத்தன்மை, தடமறிதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் மத்திய நிதி அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க பங்கு குறித்து திரு துபே பிரமுகர்களுக்கு எடுத்துரைத்தார். பொது நிதி மேலாண்மை அமைப்பு போன்ற மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் உருவாக்க டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை திரு துபே எடுத்துரைத்தார்.
***
ANU/SRI/BR/KR
(Release ID: 2021295)
Visitor Counter : 100