தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தையொட்டி மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது

Posted On: 17 MAY 2024 8:26PM by PIB Chennai

நிலையான வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் திரு நீரஜ் மிட்டல் கூறியுள்ளார்.  

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தையொட்டி தொலைத் தொடர்புத் துறை ஏற்பாடு செய்திருந்த வட்டமேஜை விவாதங்களில் திரு நீரஜ் மிட்டல் உரையாற்றினார்.

தொலைத்தொடர்பு என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று கூறிய அவர், 2025-26-ம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் சுமார் 1.5 பில்லியன் டாலராக இருக்கும் என்றார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் என்றும் அவர் கூறினார்.  

இந்தியாவில் 5ஜி அமலாக்கம் மிக வேகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள நூறு 5 ஜி பயன்பாட்டு ஆய்வகங்கள், 5 ஜி பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, அதன் மூலம் 5 ஜி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வாய்ப்புகளை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள், புத்தொழில் நிறுவனத்தினர், தொலைத் தொடர்பு சங்கங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊடகத் துறையினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினம் (WTISD):

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினம் (WTISD), ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் தொலைத்தொடர்பின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதற்காக கடைபிடிக்கப்படும் முக்கியமான சர்வதேச நாட்களில் இதுவும் ஒன்றாகும்.

சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் (ITU) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையிலும், இணையம் மற்றும் பிற தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் (ICT) பயன்பாடு அனைவருக்கும் கிடைப்பதற்கான  வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. 

***

ANU/PLM/KV



(Release ID: 2020994) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi