நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இருவாரவிழா, 2024-ஐ நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமங் நருலா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 APR 2024 6:30PM by PIB Chennai

தூய்மை இருவாரவிழா 2024-ஐ, (2024 ஏப்ரல் 16 முதல் 30 வரை) நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமங் நருலா இன்று தொடங்கி வைத்தார். இந்த அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சத்ய பிரகாஷ், நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தூய்மையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியதுடன், தூய்மை இருவாரவிழா 2024-ன் போது மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.

இந்தக் காலகட்டத்தில், அமைச்சகத்தின் நிலுவையில் உள்ள அனைத்து கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றவை அகற்றப்படும். பழைய, காலாவதியான மின்னணு மற்றும் பிற பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஏலம் விடப்படும்.

மேலும், இந்த இருவாரவிழாவின் போது தில்லியில் அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் ஒன்றில், பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் செயல்திறன் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது மேற்கொள்ளப்படுகிறது.

தூய்மை அளவுகோல்களில் சிறந்த இடத்தைப் பெறும் முதல் மூன்று பிரிவினருக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் பரிசுகளை வழங்குவதுடன் இருவாரவிழா 2024 ஏப்ரல் 30 அன்று நிறைவடையும்.

---

ANU/AD/SMB/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2018083) வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi