சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பாபா சாஹேப் அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணம் - வாழ்க்கை, வரலாறு மற்றும் பணிகள்

Posted On: 13 APR 2024 3:13PM by PIB Chennai

பாபா சாஹேப் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் 14 ஆவது மற்றும் கடைசி குழந்தையாவார்.

டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர், சுபேதார் ராம்ஜி மலோஜி சக்பாலின் மகனாவார். அம்பேத்கரின் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சுபேதாரராகப் பணிபுரிந்தார். பாபா சாஹேபின் தந்தை, துறவி கபீரை பின்பற்றுபவராகவும் நன்கு படித்தவராகவும் திகழ்ந்தார்.

பாபா சாஹேப் அம்பேத்கரின் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கு இரண்டு வயதாகியிருந்தது. ஆறு வயதாக இருந்த போது அவரது தாயார் காலமானார். பாபா சாஹேப் தனது தொடக்கக் கல்வியை பம்பாயில் பயின்றார். இந்தியாவில் தீண்டாமை என்பதை தமது பள்ளி நாட்களிலிருந்தே அவர் கடும் அதிர்ச்சியுடன் உணரத் தொடங்கினார்.

டாக்டர் அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை சத்தாராவில் பயின்றார். துரதிருஷ்டவசமாக தமது தாயாரை டாக்டர் அம்பேத்கர் இழந்ததால், அத்தையின் பராமரிப்பில் அவர் வாழ்ந்தார். பின்னர் அவர்கள் பம்பாய் இடம் பெயர்ந்தனர். பள்ளிக் காலம் முழுவதும் தீண்டாமைக் கொடுமையால் டாக்டர் அம்பேத்கர் அவதியுற்றார். பள்ளி இறுதி வகுப்பு (மெட்ரிகுலேஷன்) முடித்த பின்னர் 1907 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றது.

டாக்டர் அம்பேத்கர் தமது பட்டப்படிப்பை பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார். இந்தப் படிப்பிற்காக அவர் பரோடாவின் மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் உதவித்தொகையை பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் பரோடா சமஸ்தானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. பரோடாவில் பணியாற்றிய போது அவரது தந்தையை இழந்தார். 1913 ஆம் ஆண்டில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல டாக்டர் அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார். இது அவரது கல்வியில் திருப்புமுனையாக அமைந்தது.

எம் ஏ (முதுநிலை) மற்றும் பிஹெச்டி (முனைவர்) பட்டங்களை கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து முறையே 1915 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் அவர் பெற்றார். மேலும் படிப்பதற்காக அவர் லண்டன் சென்றார். அங்கு கிரேஸ் இன் சட்டக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்ததுடன் லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் டி எஸ்சி படிக்கவும் அவருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் பரோடா திவானால் அவர் இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டார். பின்னர் பார் அட் லா மற்றும் பிஎஸ்சி பட்டங்களையும் அவர் பெற்றார். ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகத்திலும் சில காலம் அவர் பயின்றார்.

1916 ஆம் ஆண்டில் அவர், "இந்தியாவில் சாதிகள் - அவற்றின் செயல்பாடு, தோற்றம் மற்றும் வளர்ச்சி" என்ற கட்டுரையை வாசித்தார். 1916 ஆம் ஆண்டில் "இந்தியாவிற்கான தேசியப் பங்கு - வரலாற்று மற்றும் பகுப்பாய்வு ஆராய்ச்சி" என்ற தமது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து பிஹெச்டி பட்டத்தை அவர் பெற்றார். இது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, "பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதி உருவாக்கம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த உயரிய பட்டத்தைப் பெற்ற பிறகு இந்தியா திரும்பிய அவர், பரோடா மகாராஜாவின் ராணுவச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரை நிதியமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற நீண்ட கால பார்வையுடன் இந்த நியமனம் செய்யப்பட்டது.

உதவித்தொகை காலம் நிறைவடைந்த பின்னர் 1917 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாபா சாஹேப் பரோடா நகருக்கு திரும்பி பணியில் இணைந்தார். குறுகிய காலம் அங்கு இருந்த அவர் 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். தீண்டாமையின் அடிப்படையில் அவர் எதிர்கொண்ட கொடுமைகள் அவரை பணியிலிருந்து விலகச் செய்தது.

டாக்டர் அம்பேத்கர் பம்பாய்க்குத் திரும்பி சிடென்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதார போராசிரியராகப் பணியில் சேர்ந்தார். நல்ல படிப்பறிவை பெற்றிருந்ததால் மாணவர்களிடம் அவர் வரவேற்பைப் பெற்றார். எனினும் லண்டனில் மீண்டும் சட்டம் மற்றும் பொருளாதார படிப்பைத் தொடர்வதற்காக அந்தப் பணியிலிருந்து அவர் விலகினார். இதற்காக கோலாப்பூர் மகாராஜா அவருக்கு நிதியுதவி செய்தார். 1921 ஆம் ஆண்டு தமது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். "பிரிட்டிஷ் இந்தியாவில் ஏகாதிபத்திய நிதி அளித்தலில் மாகாண பரவலாக்கம்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்பித்து லண்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து எம்எஸ்சி பட்டத்தை அவர் பெற்றார். பின்னர் சில காலம் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகத்தில் அவர் பயின்றார். 1923 ஆம் ஆண்டில் "ரூபாயின் சிக்கல்கள் அதன் தோற்றம் மற்றும் தீர்வு" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்து டிஎஸ்சி பட்டத்தை அவர் பெற்றார். 1923 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

1924-ல் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்தபின் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்கான சங்கத்தை அவர் தொடங்கினார். இதன் தலைவராக சர் சிமன்லால் ஸ்டெதால்வத் தலைவராகவும், டாக்டர் அம்பேத்கர் அவைத்தலைவராகவும் இருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே கல்வியைப் பரப்புவதும், பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் அவர்களின் கோரிக்கைகளை சமர்ப்பித்தலும், இந்த சங்கத்தின் உடனடி நோக்கங்களாக இருந்தன.

புதிய சீர்திருத்தக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்க 1927 ஏப்ரல் 3-ல் பகிஷ்கிரித் பாரத் என்ற செய்தித்தாள் தொடங்கப்பட்டது.

1928-ல் பம்பாய் அரசு சட்டக்கல்லூரியில் அவர் பேராசிரியரானார். 1935 ஜூன் 1 அன்று இதே கல்லூரியின் முதல்வரானார். 1938-ல் பதவி விலகும் வரை இதே பதவியில் இருந்தார்.

1935 அக்டோபர் 15 அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் மாகாண மாநாடு நாசிக் மாவட்டம் யேலாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், “நான் இந்துமதத்தில் பிறந்தேன். ஆனால், ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்” என்ற இந்துக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டார். அவரது முடிவை ஆயிரக்கணக்கானோர் ஆதரித்தனர். 1936-ல் பம்பாய் மாகாண மஹர் மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்து மதத்திலிருந்து வெளியேறும் யோசனையை முன்வைத்தார்.

1936 ஆகஸ்ட் 15 அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்க சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கினார். இது பெரும்பாலான தொழிலாளர்களைக் கொண்டிருந்தது.

1938-ல் தீண்டப்படாதவர்களின் பெயரில் மாற்றம் செய்யும் மசோதா ஒன்றை காங்கிரஸ் அறிமுகம் செய்தது. இதனை டாக்டர் அம்பேத்கர் விமர்சித்தார். பெயரை மாற்றுவது, பிரச்சனைக்குத் தீர்வாகாது என்பது அவரது கருத்தாகும்.

1942-ல் இந்திய கவர்னர் ஜெனரலின் நிர்வாக சபைக்கு தொழிலாளர் துறை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். 1946-ல் வங்கத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலத்தில், சூத்திரர்கள் யார்? என்ற நூலினை வெளியிட்டார்.

சுதந்திரத்துக்குப் பின், 1947-ல் நேருவின் முதலாவது அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால், 1951-ல் காஷ்மீர் பிரச்சனை, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இந்து சட்ட மசோதாவில் நேருவின் கொள்கை ஆகியவற்றில் நமது கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்தியாவின் அரசியல் சட்ட வரைவில் அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக 1952-ல் ஒலிம்பிய பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1955-ல் மொழிவழி மாநிலங்கள் குறித்த எண்ணங்கள் என்ற நமது புத்தகத்தை வெளியிட்டார்.

1953 ஜனவரி 12 அன்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பி ஆர் அம்பேத்கர் டாக்டர் பட்டம் பெற்றார். அதேசமயம், “நான் இந்துவாக இறக்கமாட்டேன்” என்று 1935-ல் யேலாவில் அறிவித்ததை 21 ஆண்டுகளுக்கு பின், உண்மை என நிரூபித்தார். 1956 அக்டோபர் 15-ம் தேதி அன்று நாக்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் அவர் புத்த மதத்தைத் தழுவினார். 1956 டிசம்பர் 6 அன்று அவர் உயிரிழந்தார்.

1954-ல் நேபாளத்தின் காட்மாண்டுவில் “ஜெகதிக் புத்த மத சபையில்” உள்ள புத்த பிட்சுகள் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு “போதிசத்வா” என்ற பட்டத்தை வழங்கினர். இதன் சிறப்பு என்னவென்றால், அவர் உயிரோடு இருக்கும் போதே, போதிசத்வா பட்டம் வழங்கப்பட்டதாகும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கும், விடுதலைக்குப் பிந்தைய சீர்திருத்தங்களுக்கும் அவர் பங்களிப்பு செய்துள்ளார். இது தவிர, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பாபா சாகேப் குறிப்பிடத்தக்கப் பணியை செய்துள்ளார். ஹில்டன் யங் கமிஷனுக்கு பாபா சாகேப் சமர்ப்பித்த கருத்து அடிப்படையில், இந்த மத்திய வங்கி உருவாக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கரின் ஒளிமயமான வரலாறு அவர் ஆய்வு மற்றும் செயல்பாட்டின் மனிதராக விளங்கியதை காட்டுகிறது. முதலில் அவர் பொருளாதாரம், அரசியல், சட்டம், தத்துவம், சமூகவியல் ஆகியவற்றில் சிறந்த ஞானத்தை பெற்றிருந்தார். இவர் பல சமூக பிரச்சனைகளை எதிர்கொண்டார். அவர் தமது வாழ்நாள் முழுவதையும் கற்றல், ஆய்வு செய்தல், நூலகங்கள் என்று கழிக்கவில்லை. அதிக வருவாய் ஈட்டும் உயர் பதவிகளை அவர் நிராகரித்தார். தமது சகோதாரர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் இருந்ததை அவர் ஒரு போதும் மறக்கவில்லை. தமது வாழ்நாளின் எஞ்சியப் பகுதியை சமத்துவம். சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அனைத்து சிறந்த வழிகளிலும் முயற்சி செய்தார்.

அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்ததற்குப் பின் அவரது முதன்மையான பங்களிப்பு பற்றியும், அதன் பொருத்தப்பாடு பற்றியும் ஆய்வு செய்வதும், பகுப்பாய்வு செய்வதும் அவசியமாமனது, முறையானது. ஒரு கருத்தின் படி, மூன்று விஷயங்கள் இன்றும் கூட, மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. இன்றும் கூட, இந்தியப் பொருளாதாரமும், இந்திய சமூகமும் பல பொருளாதார சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் நமக்கு வழிகாட்டும்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6-ம் தேதி நாடு முழுவதும் மகாபரிநிர்வாண் தினம் என அனுசரிக்கப்படுகிறது.

டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான நாளை (ஏப்ரல் 14) காலை, நாடாளுமன்ற வளாகத்தின் புல்வெளியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். 

********

SRI/PLM/DL



(Release ID: 2017850) Visitor Counter : 65