ஆயுஷ்

ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஷில்லாங்கில் உள்ள வடகிழக்குப் பகுதி ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி நிறுவனத்தில் புதிய வசதிகளை தொடங்கி வைத்தார்

Posted On: 23 FEB 2024 5:55PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஷில்லாங்கின் மாவ்டியாங்டியாங்கில் உள்ள வடகிழக்குப் பகுதி ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி நிறுவனத்தின் வளாகத்தில் அந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு புதிய பணிகளை இன்று தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்படும் புதிய நிர்வாக கட்டடம், மருந்தக கட்டிடம், நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்கள் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்தா சோனோவால், வடகிழக்குப் பகுதி ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி நிறுவனம் ஏற்கனவே ஏராளமான ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது என்றார். இது இந்தப் பகுதியில், குறிப்பாக மேகாலயாவில் சுகாதார சேவை வழங்கலைப் பெரிதும் வலுப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  ஆயுஷ் மருத்துவ முறைகள் தொடர்பான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க தமது அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

ஆயுஷ் மருத்துவ முறைகளில் பல அம்சங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளூர் சமூகங்களிடையே நிலவும் பழமையான வீட்டு வைத்தியங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் இப்போது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தீர்வுகளை அவை கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.  இந்தியாவில் குணமடைதல் இந்தியாவால் குணமடைதல் என்ற  நோக்கத்துடன் உலக அளவில் ஆயுஷ் இயக்கத்தைக் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபரா மகேந்திர பாய், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கொடேச்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

AD/PLM/KRS

 

Release ID: 2008449



(Release ID: 2008535) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Hindi , Assamese