வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கட்டட கட்டுமானம் மற்றும் இடிக்கப்பட்ட கழிவுகளை திறம்பட அகற்றுவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது: ஹர்தீப் சிங் பூரி

Posted On: 19 FEB 2024 3:43PM by PIB Chennai

கட்டுமானத் துறையில் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், பயன்படுத்துதலில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ற தலைப்பிலான தேசிய பயிலரங்கை தில்லியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்தியப் பொருளாதாரத்திற்கு கட்டுமானத் தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இந்தியாவில் விரைவாக வளர்ந்து வரும் தொழில்களில் கட்டுமானத் துறையும் ஒன்றாகும் என்று கூறினார். இது நாட்டின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் துறை என்று அவர் தெரிவித்தார்.  கட்டுமானத் துறையில் 2025-ம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கட்டுமான சூழலை நாம் மிக விரைவாக உருவாக்கி வருகிறோம்  என்று அவர் தெரிவித்தார். நாட்டின் நகரமயமாக்கல், தேவைகள் குறித்த புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 2030 க்குள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700-900 மில்லியன் சதுர மீட்டர் வணிக மற்றும் குடியிருப்பு இடங்களை சேர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், நமது லட்சியத்தில் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேசியத் தலைநகர் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 6,303 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் உருவாகின்றன என்றும், இதில் சுமார் 78% கழிவுகள் ஒரு நாளைக்கு பதப்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

கட்டடக் கழிவுகளை திறம்பட பயன்படுத்துவதற்கான சிறந்த உத்திகளை வகுக்க அரசுக்கு உதவுமாறு தொடர்புடையவர்களை அமைச்சர் வலியுறுத்தினார்.

நார்வே சின்டெஃப் உடன் இணைந்து மத்திய பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த பயிலரங்கு, கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களுக்கு  கட்டடக் கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.

***

ANU/AD/IR/AG/DL



(Release ID: 2007144) Visitor Counter : 74