புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க கைகோர்த்துள்ளன

Posted On: 19 FEB 2024 2:33PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ)  மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்று 2024  பிப்ரவரி 19, அன்று புதுதில்லியில் உள்ள ஐஆர்இடிஏ பதிவு அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், பல்வேறு வகையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு  இரு நிறுவனங்களும் இணைந்து கடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வழி வகுக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு விதிகளை உள்ளடக்கியுள்ளது. கூட்டுக் கடன், கடன் ஒருங்கிணைப்பு, ஐஆர்இடிஏ-வில் கடன் வாங்குபவர்களுக்கான நம்பிக்கை மற்றும் தக்கவைப்பு கணக்கை நிர்வகித்தல் மற்றும் ஐஆர்இடிஏ கடன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது உட்பட போட்டி விதிமுறைகளை நோக்கி செயல்படுதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஒத்துழைப்பின் மூலம், ஐஆர்இடிஏ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பரஸ்பரம் தங்களின் ஏதேனும் ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

ஐஆர்இடிஏ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு அதுல் குமார் கோயல், ஐஆர்இடிஏ இயக்குநர் (நிதி) டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி மற்றும் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஐஆர்இடிஏ பொது மேலாளர் டாக்டர் ஆர்.சி.சர்மா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை பொது மேலாளர் திரு ராஜீவா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒத்துழைப்பு குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஐஆர்இடிஏ-இன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ் கூறுகையில், " ஐஆர்இடிஏ மற்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி இடையேயான இந்த  உத்திபூர்வ கூட்டாண்மை நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பைக் குறிக்கிறது. இருதரப்பின் வளங்களை இணைப்பதன் மூலம், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்ப்பதன் மூலம் பல்வேறு வகையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வலுவான நிதி ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பிற முன்னணி நிதி நிறுவனங்களுடனான முந்தைய ஒப்பந்தங்கள் மூலம், 2030 ஆம் ஆண்டளவில் 500 ஜிகாவாட் அல்லாத புதைபடிவ அடிப்படையிலான மின்சார உற்பத்தி திறனை அடைவதற்கான பிரதமரின் சிஓபி26 அறிவிப்புடன் இணைந்து, பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிக்கும் பணியை ஐஆர்இடிஏ மேற்கொள்ளவுள்ளது.

பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, இந்திய நிதி நிறுவனம், பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பிற முக்கிய நிதி நிறுவனங்களுடனான ஐஆர்இடிஏ- இன் வெற்றிகரமான கூட்டாண்மைகளை இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்துகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், நாடு முழுவதும் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இணை கடன் மற்றும் கடன் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகின்றன.

***

ANU/AD/BS/RS/KV/DL



(Release ID: 2007112) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Hindi , Punjabi