ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது


ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 JAN 2024 1:00PM by PIB Chennai

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நீர் இயக்கம் "நீர் தொலைநோக்குப் பார்வை @ 2047 –முன்னோக்கிய பயணம்" என்ற தலைப்பில் அகில இந்திய செயலாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளது. 2024 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, போபாலில் 2023 ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற "முதல் அகில இந்திய மாநில அமைச்சர்கள் மாநாட்டில்" பரிந்துரைக்கப்பட்ட 22 பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரம், பருவநிலை பின்னடைவுகள் மற்றும் நதிகளின் தூய்மை நிலை, நீர் பயன்பாட்டு திறன், நீர் சேமிப்பு, மக்கள் பங்கேற்பு ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களை மையமாக வைத்து இந்த மாநாட்டில் அமர்வுகள் இடம்பெறும்.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் திரு துரை முருகன் ஆகியோர் இந்த இரண்டு நாள் விவாதங்களில் கலந்து கொள்வார்கள். ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் பாதுகாப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட படம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.  மழை நீர் சேகரிப்புத் தொடர்பான நூல் ஒன்றும் இதில் வெளியிடப்படும்.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர்கள், பல்வேறு மாநிலங்களின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

நீர் வளத்துறை தொடர்பான பணிகளில் உள்ளவர்களிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான முக்கிய தளமாக இந்த மாநாடு செயல்படும். அரசு சாரா அமைப்புகள், மற்றும் தொடர்புடைய பிற பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.

***********

ANU/SM/PLM/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 1997795) வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu