பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு சாதனைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2023 12:22PM by PIB Chennai
பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை
MINISTRY OF DEFENCE - YEAR END REVIEW 2023
பாதுகாப்பு அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு சாதனைகள்
புதுதில்லி, டிசம்பர் 22, 2023
பாதுகாப்பான, தற்சார்பு மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதென்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், 2023-ம் ஆண்டு, குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது.
இந்தியாவை உலகின் முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதென்ற, அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக, பாதுகாப்பு சாதன ஏற்றுமதி வெகுவாக அதிகரித்திருப்பதுடன், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆக்கப்பூர்வ சாதனங்களின் பட்டியலும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
உலகின் மிக உயரமான போர்க்களத்திற்கு படைப்பிரிவுகளை நிறுத்தியிருப்பது முதல், கடற்படை கப்பல்கள், பெண்களின் வலிமை போன்றவை, நமது ராணுவத்தின் திறமைகளைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
எல்லைப்புற கட்டமைப்பை வலுப்படுத்துதல், பெண்களின் வலிமையை பயன்படுத்துதல் போன்றவற்றுடன் முன்னாள் படைவீரர்களின் நலனிலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் வழிகாட்டுதலுடன், பாதுகாப்புத் துறை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாகவும், எழுச்சியுடனும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு
ஆக்கப்பூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியல் : ராணுவ விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள ஐந்தாவது ஆக்கப்பூர்வ உள்நாட்டு மயமாக்கல் பட்டியலில், தொழில்நுட்பமிக்க சாதனங்கள், தொலையுணர் கருவிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட 98 சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சாதனங்கள் அனைத்தும், உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளவாட உற்பத்தியில் சாதனை : 2021-22 நிதியாண்டில் ரூ.95,000 கோடியாக இருந்த ராணுவ தளவாட உற்பத்தி, 2022-23ல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
ராணுவ தளவாட ஏற்றுமதியில் சாதனை: அரசு மேற்கொண்ட பல்வேறு கொள்கை முடிவுகள் மற்றும் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அளப்பரிய பங்களிப்பு காரணமாக, முந்தைய நிதியாண்டை விட ரூ.3,000 கோடி அதிகரித்து, 2022-23 நிதியாண்டில் ரூ.16,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. டார்னியர் -228, 155 மி.மீ. அதிநவீன பீரங்கிகள், கவச வாகனங்கள், பினாகா ராக்கெட்டுகள் மற்றும் செலுத்து வாகனங்கள், வெடிபொருட்கள், தெர்மல் இமேஜர், உடல் கவசங்கள் மற்றும் விமான உதிரி பாகங்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் இலகுரக போர் விமானமான தேஜஸ், இலகுரக ஹெலிகாப்டர்கள், விமானந்தாங்கி கப்பல்கள் போன்றவற்றிற்கு, உலக நாடுகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு தனி ஒதுக்கீடு : 2023-24ம் நிதியாண்டில், பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கான மொத்த ஒதுக்கீட்டில் 75 சதவீத அளவிற்கு (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) , உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலை : கர்நாடகாவின் துமகூருவில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த நிறுவனம், தொடக்கத்தில் ஆண்டுக்கு 30 இலகுரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும். பின்னர், படிப்படியாக 60 மற்றும் 90 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
பிரதமரின் தேஜஸ் பயணம் : பெங்களூருவில் எச்ஏஎல் நிறுவனத்தின் இரட்டை இருக்கை இலகுரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் 30 நிமிடம் பறந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தப் போர் விமானத்தில் பறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
சி-295 போக்குவரத்து விமானம் : டாடா அதிநவீன சாதனங்கள் நிறுவனம் மற்றும் ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டின் ஸ்பேஸ் எஸ்.ஏ. நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மூலம் தயாரிக்கப்படும் சி-295 போக்குவரத்து விமானத்தில், முதலாவது விமானம், இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மேலும் 15 விமானங்கள் ஆகஸ்ட் 2025-க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின், குஜராத்தின் வதோதராவில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட விமான தயாரிப்பு தொழிற்சாலையில், 40 சி-295 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
ராணுவ தளவாட கொள்முதல் : நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்தும் விதமாக, ரூ.3.50 லட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ராணுவ கொள்முதல் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் : பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டு திறமைகளை மேம்படுத்தும் விதமாக, ரூ.17,176 கோடி மதிப்புள்ள சாதனங்களை தயாரித்து வழங்க, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுனத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானம் : இந்திய விமானப் படைக்கு, ரூ.6,828.36 கோடி செலவில், 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க, பாதுகாப்பு அமைச்சகம், எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதேபோன்று பயிற்சி கப்பல்கள், டார்னியர்-228 ரக விமானங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை போன்றவற்றை வாங்கவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லைப்புற கட்டமைப்பு : எல்லைச் சாலைகள் நிறுவனத்தால் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள 118 கட்டமைப்பு திட்டங்களை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். செப்டம்பரில் மட்டும், 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில், ரூ.2,900 கோடி மதிப்புள்ள 90 கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தின் நெச்சிஃபூ சுரங்கப்பாதை, இரண்டு விமான தளங்கள், இரண்டு ஹெலிபேடுகள், 22 சாலைகள் மற்றும் 63 பாலங்களும் இதில் அடங்கும்.
***************
(Release ID: 1989502)
(வெளியீட்டு அடையாள எண்: 1990580)
வருகையாளர் எண்ணிக்கை : 372