பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த பாரதம் 2047 தொடக்க விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
11 DEC 2023 12:36PM by PIB Chennai
வணக்கம்!
மத்திய அமைச்சரவையில் எனது சகாவான தர்மேந்திர பிரதான் அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்றுள்ள ஆளுநர்கள், கல்வித் துறையில் சிறந்த ஆளுமைகள் மற்றும் பெண்களே!
'வளர்ச்சியடைந்த பாரதம்' தொடர்பான இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்த அனைத்து ஆளுநர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் இளைஞர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கும் அனைத்து சகாக்களையும் ஒரே மேடையில் கொண்டு வந்துள்ளீர்கள். கல்வி நிறுவனங்களின் பங்கு தனிமனித வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது, மேலும் தேசம் தனிநபர் வளர்ச்சியின் மூலம் கட்டமைக்கப்படுகிறது. பாரதம் தற்போது தன்னைக் காணும் சகாப்தத்தில், தனிநபர் வளர்ச்சிக்கான பிரச்சாரம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. ”இளைஞர்களின் குரல்” பயிலரங்கம் வெற்றி பெற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே
ஒவ்வொரு நாடும் அதன் வரலாற்றில் ஒரு கட்டத்தை அனுபவிக்கிறது. அது அதன் வளர்ச்சிப் பயணத்தை பல மடங்கு முன்னோக்கி நகர்த்துகிறது. இது அந்த நாட்டுக்கு 'அமிர்த காலம்' (பொற்காலம்) போன்றது. பாரதத்தைப் பொறுத்தவரை இந்தப் பொற்காலம் இப்போது வந்துவிட்டது. பாரத வரலாற்றில் இது ஒரு பெரிய உந்துதலுக்கான காலகட்டமாகும். இது பாரதத்திற்கான நேரம், இது சரியான நேரம். இந்த நேரத்தின் ஒவ்வொரு கணத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; நம்மால் ஒரு கணத்தைக் கூட இழக்க முடியாது .
நண்பர்களே
நமது நீண்ட கால சுதந்திரப் போராட்டமும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. சுதந்திரத்தை இறுதி குறிக்கோளாகக் கருதி, உற்சாகத்துடனும், உறுதியுடனும் களத்தில் நுழைந்தபோது, நாம் வெற்றி பெற்றோம். சத்தியாக்கிரகம், புரட்சிப் பாதை, சுதேசி பற்றிய விழிப்புணர்வு, சமூக, கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பிரக்ஞை என அனைத்து நீரோட்டங்களும் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் வலிமையின் ஊற்றுக்கண்ணாக அமைந்தன. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம், விஸ்வ பாரதி, குஜராத் வித்யாபீடம், நாக்பூர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம் போன்ற பல நிறுவனங்கள் தேசத்தின் உணர்வை வலுப்படுத்த பங்களித்தன. இளைஞர்கள் மத்தியில் சுதந்திரம் குறித்த புதிய விழிப்புணர்வு அனைத்துத் துறைகளிலும் பரவிய காலம் அது. விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைமுறை உருவானது. எதைச் செய்ய வேண்டுமோ, அது சுதந்திரத்திற்காக இருக்க வேண்டும், அதை இப்போதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் நாட்டில் வளர்ந்தது.
அதேபோல், இன்று, ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு அமைப்பும், நான் எதைச் செய்தாலும், அது வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியுடன் முன்னேற வேண்டும். உங்கள் இலக்குகள், உங்கள் தீர்மானங்கள் ஒரே ஒரு குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும்.
நண்பர்களே
நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி நிறுவனங்களில் உங்கள் பங்கு இளைஞர்களின் ஆற்றலை இந்த இலக்கை நோக்கி செலுத்துவதாக இருக்க வேண்டும். உங்கள் நிறுவனங்களுக்கு வரும் ஒவ்வொரு இளைஞருக்கும் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவர்களின் மாறுபட்ட எண்ணங்களைப் பொருட்படுத்தாமல் 'வளர்ச்சியடைந்த பாரதத்தை' உருவாக்கும் நீரோட்டத்துடன் அவர்கள் இணைக்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
'வளர்ச்சியடைந்த பாரதத்தை' உருவாக்கும் இந்த அமிர்தகாலத் தேர்வு நாட்களில், மாணவர்கள் தங்கள் தேர்வு செயல்திறன் குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். இருப்பினும் அவர்கள் கடைசி நிமிடம் வரை எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை. ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கணத்தையும் ஒரே குறிக்கோளுடன் ஒருங்கிணைத்து அனைத்தையும் முதலீடு செய்கிறார்கள். தேர்வு தேதிகள் நெருங்கும் போது, தேதிகள் அறிவிக்கப்படும் போது, ஒட்டுமொத்த குடும்பத்தின் தேர்வு தேதியும் வந்துவிட்டது போல் இருக்கும். மாணவர்கள் மட்டுமல்ல; முழு குடும்பமும் கட்டுப்பாட்டின் எல்லைக்குள் இயங்குகிறது. நாட்டின் குடிமக்களான நமக்கும், தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'அமிர்தகால' இலக்குகளுக்காக நாம் 24 மணி நேரமும் உழைக்க வேண்டும். இந்தச் சூழலில் நாம் கூட்டாக, ஒரு குடும்பமாக அதை வடிவமைக்க வேண்டும். இது நம் அனைவருக்கும் பகிரப்பட்ட பொறுப்பாகும்.
நண்பர்களே,
இன்று, உலக மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா அதன் இளைஞர்களால் அதிகாரம் பெறுகிறது. வரும் 25-30 ஆண்டுகளில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உலகத்தின் பார்வை பாரத இளைஞர்கள் மீதே உள்ளது. இளைஞர்கள் மாற்றத்தின் முகவர் மட்டுமல்ல, மாற்றத்தின் பயனாளியும் கூட. இன்றைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள இளம் சகாக்கள்தான் இந்த முக்கியமான 25 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையை வடிவமைக்கிறார்கள். இந்த இளைஞர்கள் புதிய குடும்பங்களை உருவாக்குவார்கள்; ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவார்கள். எனவே, ஒவ்வொரு இளைஞரையும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' செயல் திட்டத்துடன் இணைப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்றைய பயிலரங்கிற்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தொடங்கும் இயக்கம் 2047-ம் ஆண்டுக்குள் ’வளர்ச்சியடைந்த பாரதத்தை' நோக்கி நம்மை இட்டுச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்று தொடங்கும் பயணம், தலைமைக் கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கைகளில் உள்ளது, இது தேசத்தையும் தலைமுறையையும் கட்டியெழுப்பும் ஒரு காலம். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றி.
***
ANU/SMB/PKV/AG
(Release ID: 1987595)
Visitor Counter : 76
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam