அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாட்டின் உயிரிப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
29 NOV 2023 6:06PM by PIB Chennai
நாட்டின் உயிரிப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்ஐபிஜிஆர்) வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 'தேசிய தாவர கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் அமைப்பை' இன்று (29.11.2023) அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் 2014-ம் ஆண்டில் 10 பில்லியன் டாலராக இருந்தது எனவும், தற்போது அது 120 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் இது 300 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறந்த நடவடிக்கைகள் காரணமாக இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பங்களை உகந்த முறையில் பயன்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவியல் நிறுவனங்களை அவர் கேட்டுகொண்டார். தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்கள், நாட்டின் வேளாண் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து மிக்க நாடாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
2025-ம் ஆண்டுக்குள் உலக அளவில் முதல் 5 உயிரி உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் உயிரி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 6,000 ஆக உயர்ந்துள்ளது என்று இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
***
(Release ID: 1980886)
ANU/AD/PLM/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1980942)
வருகையாளர் எண்ணிக்கை : 172