விண்வெளித்துறை

கேரளாவின் தும்பாவிலிருந்து பேரொலி எழுப்பிப் பாய்ந்த இந்தியாவின் முதலாவது செலுத்து வாகனத்தின் வைர விழா 2023 ஆம் ஆண்டுடன் ஒத்துப்போகிறது, இது சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டங்களின் இரட்டை வரலாற்றுச் சாதனைகளைக் கண்டது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 25 NOV 2023 4:39PM by PIB Chennai

கேரளாவின்  தும்பாவிலிருந்து பேரொலி எழுப்பிப் பாய்ந்த இந்தியாவின் முதலாவது செலுத்து வாகனத்தின்  வைர விழா 2023 ஆம் ஆண்டுடன் ஒத்துப்போகிறது, இது சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டங்களின்  இரட்டை வரலாற்றுச் சாதனைகளைக் கண்டது  என்று மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை 'தேசிய விண்வெளி தினமாக' பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்த ஆண்டாக 2023 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம்பெறும் என்றும்  அவர் கூறினார்.

தும்பாவில்  உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த விழாவில், முதலாவது சவுண்டிங் ராக்கெட் செலுத்தப்பட்டதன் 60 வது ஆண்டு  தினத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

1963, நவம்பர் 21,  அன்று அசல் ஏவுதல் நடந்த ஸ்பேஸ் பாடில் இருந்து இதேபோன்ற சவுண்டிங் ராக்கெட் சம்பிரதாயபூர்வமாக செலுத்தப்படுவதை டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார். 60 ஆண்டுகளுக்கு முன்  கவுண்ட் டவுனை வாசித்த திரு பிரமோத் பி காலே, ஒரு அடையாளபூர்வமான  கவுண்ட் டவுனை அறிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டங்களின் வெற்றி இந்தியாவின் உள்நாட்டுத் திறன்களை மீண்டும் வலியுறுத்துகிறது என்றும்  இஸ்ரோவின் முதல் தலைவரும், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் நிறுவனத் தந்தையுமான டாக்டர் விக்ரம் சாராபாய் ஆறு தசாப்தங்களுக்கு முன்பு கண்ட கனவை உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

"வளங்கள் குறைவாக இருந்திருக்கலாம், ஆனால் நம்பிக்கைக்கு குறைவிருக்கவில்லை,  இந்தியாவின் உள்ளார்ந்த திறன் மற்றும் மதிநுட்பத்தின்   மீது  விக்ரம் சாராபாய் நம்பிக்கை வைத்திருந்தார்" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் 'முழு அறிவியல் மற்றும் முழு தேசமும்' அணுகுமுறைக்கு ஒரு சான்றாகும் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், "இந்தியாவின் விண்வெளித் துறைக்கு புதிய பாதைகளைத் திறப்பதன் மூலமும், 'வானம் வரம்பு அல்ல' என்று சொல்வதன் மூலமும் இந்த கனவை நனவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட்அப்களுடன் விண்வெளி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நாடு ஸ்டார்ட்அப் எழுச்சியைக் கண்டது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

சமீபத்திய சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா எல் 1 திட்டங்கள் உட்பட கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் ஊக்கம் பெற்ற இந்திய விண்வெளி முன்முயற்சிகளின் வெற்றியை விவரித்த டாக்டர் ஜிதேந்திர சிங்,  2025 க்குள் இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டமான 'ககன்யான்', இந்திய விண்வெளி நிலையம் ஆகியவற்றை 2035-க்குள் இலக்காகக் கொள்ளுமாறு பிரதமர் மோடி இஸ்ரோவை கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

"India@2047" குறித்த அமிர்த காலம் மற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், சுதந்திர இந்தியா தனது 100 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது விண்வெளிப் பொருளாதாரம் நாட்டின் பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கப் போகிறது, மேலும் உலகின் முன்னணி நாடாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.   

*****

ANU/PKV/SMB/DL



(Release ID: 1979771) Visitor Counter : 64


Read this release in: English , Urdu , Hindi , Marathi