உள்துறை அமைச்சகம்
குஜராத்தின் காந்திநகரில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று திறந்து வைத்தார்.
Posted On:
30 SEP 2023 7:04PM by PIB Chennai
குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, அறிவு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வணிகத்தை இணைக்கும் பாலமாக மாறுவதன் மூலம் மருந்துத் துறையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளத்தை தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐபிஇஆர்) அமைத்து வருகிறது என்று திரு அமித் ஷா தனது உரையில் கூறினார். சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கட்டிடங்களில் பரந்து விரிந்துள்ள இந்நிறுவனம், மனித வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் முழுமையானதாகவும் மாற்றுவதற்கு நமது நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மருத்துவத் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கும் என்று அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக காந்திநகரில் உள்ள என்ஐபிஇஆர் நாட்டின் முதல் 10 மருந்தக நிறுவனங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இப்போது புதிய கட்டிடம் கட்டுவதன் மூலம் அது முதல் இடத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் திரு ஷா கூறினார்.
ஆராய்ச்சித் துறையில் இந்தியா தேர்ச்சி பெறாத வரை, உலகில் மருந்து உற்பத்தித் துறையில் நாம் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அவர் கூறினார். காந்திநகரில் உள்ள என்ஐபிஇஆர் ஒரு புகழ்பெற்ற சிறப்பு மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் வளரும் என்றும் திரு ஷா கூறினார். இந்தியாவில் தற்போது 7 என்ஐபிஇஆர்கள் உள்ளன, அவற்றில் மொஹாலி மற்றும் குவஹாத்தி முழுமையாக செயல்படுகின்றன, இபோது காந்திநகரில் உள்ள என்ஐபிஇஆர் முழுமையாக செயல்படவிருக்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். என்.ஐ.பி.இ.ஆர் மாணவர்கள் பெயரில் 380 க்கும் அதிகமான காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 7,000 க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு அதிநவீன ஆய்வகம் கட்டுவதற்காக மோடி அரசு ரூ.2,200 கோடியை விடுவித்துள்ளதாகவும், இது வரும் நாட்களில் மாணவர்கள் ஆராய்ச்சித் துறையில் முன்னேற உதவும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட மக்கள் மருந்தகத் திட்டம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். நாடு முழுவதும் உள்ள 10,000 மக்கள் மருந்தக மையங்களில் 1,800 மருந்துகளும், 285 அறுவை சிகிச்சை கருவிகளும் 50% முதல் 90% வரை குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறையினரும் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், நாட்டின் ஏழை குடிமக்களின் வாழ்க்கையை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் இது முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக, கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகள் மருந்துகள் வாங்குவதில் சுமார் ரூ.30,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றும் 2022-23-ம் ஆண்டில் மட்டும் ரூ.7,500 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றும் திரு. ஷா கூறினார்.
முழுமையான அணுகுமுறையுடன் மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய மருத்துவ சாதனக் கொள்கை 2023 ஐக் கொண்டு வந்துள்ளார் என்று அவர் கூறினார். கிட்டத்தட்ட 250 வகையான சாதனங்கள், 70 ஸ்டார்ட்அப்கள், 4,000 க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், 10,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 47 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பைக் கொண்ட மருத்துவ சாதன உற்பத்தித் துறையில் முதல் கண்காட்சி 2023 ஆம் ஆண்டில் காந்திநகரில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று திரு ஷா மேலும் கூறினார். மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரத் துறையில் ஒரு முழுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருவதாகவும், நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1962411
******
AD/ANU/SMB/KRS
(Release ID: 1962501)