நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அரிசி செறிவூட்டல் குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கு
இடுகை இடப்பட்ட நாள்:
22 AUG 2023 6:54PM by PIB Chennai
உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் அரிசி செறிவூட்டல் குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுதில்லியில் இன்று (22.08.2023) நடைபெற்றது.
கருத்தரங்கில் உரையாற்றிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா, நாட்டில் அரிசி அதிகம் பயன்படுத்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை 100 சதவீதம் விநியோகிக்கும் இலக்கை அடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
இக்கருத்தரங்கில், அரசு துறையினர் மட்டுமின்றி, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கல்வித்துறையினர், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரிசி செறிவூட்டல் திட்டத்தின் பல்வேறு அம்சங்களான நுகர்வுப் பாதுகாப்பு, செயல்பாட்டு சவால்கள், தர உத்தரவாதம் மற்றும் தரக் கட்டுப்பாடு குறித்து விவாதங்கள் நடைபெற்றன. மாநிலங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அது தொடர்பான கேள்விகளுக்கு வல்லுநர் குழு பதிலளித்தது. வரும் ஆண்டிற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்தும் கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கு நான்கு தொழில்நுட்ப அமர்வுகளாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில், அரிசி செறிவூட்டுதல் குறித்த வழிகாட்டுதல் கையேடும் வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உணவுத்துறைச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1951206)
வருகையாளர் எண்ணிக்கை : 204