நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

Posted On: 11 AUG 2023 6:12PM by PIB Chennai

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (11.08.2023) காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் 23 நாட்கள் 17 அமர்வுகளை கொண்டதாக அமைந்தது.

இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் 20 மசோதாக்களும், மாநிலங்களவையில் 23 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனுமதியுடன் தலா ஒரு மசோதா திரும்பப் பெறப்பட்டது. கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 21 ஆகும்.

மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னர் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட தில்லி தேசியத் தலைநகர் பிரதேச அரசு (திருத்த) அவசரச் சட்டம் 2023-க்கு மாற்றாக, மசோதா இரு அவைகளால் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.   

மக்களவையில்  திரு கௌரவ் கோகாய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுமார் 20 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. 7 அமைச்சர்கள் உட்பட 58 உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். இதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்தார்.  அதன் பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் அவையில் நிராகரிக்கப்பட்டது.

 இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாட்டுத் திறன் உத்தேசமாக 44 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 63 சதவீதமாகவும் இருந்தது.

***

AD/ANU/PLM/RS/KRS



(Release ID: 1947980) Visitor Counter : 376


Read this release in: English , Urdu , Hindi , Marathi