நாட்டின் கடல்சார் துறையை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடல்சார் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். புதிய கப்பல் நிறுத்தும் தளங்கள் மற்றும் முனையங்கள் கட்டுதல், ஏற்கனவே உள்ள கப்பல் நிறுத்தும் தளங்கள் மற்றும் முனையங்களை இயந்திரமயமாக்குதல், துறைமுக நுழைவுப் பகுதிகளில் பெரிய கப்பல்களை ஈர்ப்பதற்கு கடலின் அடிப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான தூர்வாருதல், சாலை மற்றும் ரயில் இணைப்பை மேம்படுத்துதல், பெரிய துறைமுகங்களின் திறனை அதிகரிக்க உதவுதல் ஆகியவை இந்த செயல்முறையில் அடங்கும். இதன் விளைவாக, பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 31.3.2023 நிலவரப்படி, பெரிய துறைமுகங்களின் நிறுவப்பட்ட திறன் 1,617 மெட்ரிக் டன் ஆகும். இது முக்கிய துறைமுகங்களில் தற்போதுள்ள சரக்கு போக்குவரத்தை கையாள போதுமானது.
கடல்சார் பயிற்சி, தேர்வு, சான்றளிப்பு முறை ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்தவும், கடல்சார் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்கவும், மாலுமிகளுக்கான நல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக, இந்த ஆண்டில் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கொடிகள் கொண்ட கப்பல்களில் பணியமர்த்தப்பட்ட இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 2,82,918 என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல்களில் இந்தியக் கொடிபறப்பதை மேம்படுத்துவதற்கான சில கொள்கைகள் பின்வருமாறு:
கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கை (2016-2026): இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான நிதி உதவிக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு ஒப்பந்த விலை, உண்மையான ரசீதுகள், நியாயமான விலை (எது குறைவோ அது) ஆகியவற்றில் 20% நிதி உதவி வழங்கப்படுகிறது. வழங்கப்படும் நிதி உதவி ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 3% குறைகிறது.
இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு மானிய உதவி:அமைச்சகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (சி.பி.எஸ்.இ) விடுத்த உலகளாவிய டெண்டர்களில் இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு மானிய உதவியாக ஐந்து ஆண்டுகளில் ரூ.1624 கோடியை வழங்குவதன் மூலம் இந்தியாவில் வணிகக் கப்பல்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மானிய உதவி விகிதம் கப்பலின் வயதை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்டம் தொழில்முனைவோரை இந்திய கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்ய ஊக்குவிக்கிறது.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1941375)
ANU/SMB/KRS