நிதி அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        3-வது ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் 2023 ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                18 JUL 2023 6:01PM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்திய தலைமைத்துவத்தின் கீழ் 3-வது ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் 2023 ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு.சக்திகாந்த தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
 
ஜி-20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்ற இந்திய தலைமைத்துவத்தின் கருப்பொருளின் கீழ், ஜி-20 அமைச்சர்கள் மற்றும் வங்கிகளின் ஆளுநர்கள் மக்களின் நல்வாழ்வுக்கும், பூமியின் நன்மைக்கும் முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்தனர். 
 
இக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகப் பொருளாதாரத்தை வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவதில், ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். உணவு, எரிசக்தி பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் மேக்ரோ பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் உட்பட சர்வதேச பொருளாதாரத்திலுள்ள அபாயங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை போன்றவற்றில் சர்வதேச அளவிலான முயற்சிகளை முன்னெடுப்பது குறித்தும் உறுப்பினர்கள் விவாதித்தனர்.
 
மேலும், மத்திய நிதியமைச்சர் சீதாராமன் கூட்டத்தில் கலந்துகொண்ட பிற நாட்டு நிதியமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் அடுத்தக் கூட்டம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டத்திற்கு இடையே, 2023 அக்டோபர் மாதம் மராகேஷில் நடைபெறவுள்ளது. 
***
LK/CR/RJ
                
                
                
                
                
                (Release ID: 1940796)
                Visitor Counter : 300