பிரதமர் அலுவலகம்

போர்ட் பிளேரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வீர் சாவர்கர் பன்னாட்டு புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஜூலை 18) திறந்து வைக்கிறார்


இயற்கையால் ஊக்குவிக்கப்பட்டு கடல் மற்றும் தீவுகளை சித்தரிக்கும் வகையில் சிப்பி வடிவில் இந்த விமான நிலைய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது

தீவின் சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இந்த முனையத்தில் பல்வேறு நிலையான நீடித்த அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

புதிய ஒருங்கிணைந்த முனையம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது

இது இப்பகுதியின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

Posted On: 17 JUL 2023 11:23AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, போர்ட் பிளேரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வீர் சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை நாளை (ஜூலை 18) காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

போக்குவரத்து தொடர்புக்கான கட்டமைப்பை விரிவுபடுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும். சுமார் 710 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பன்னாட்டு விமான நிலையம் அந்தமான் தீவின் வளர்ச்சிக்கு வழிவகுக்க முக்கியக் கருவியாக இருக்கும். 40,800 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முனையம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் 2 போயிங் விமானங்கள், 2 ஏர்பஸ் விமானங்கள் இறங்க மற்றும் ஏறும் வகையில் ஓடுபாதை அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்த முடியும்.

இயற்கையால் ஊக்குவிக்கப்பட்டு கடல் மற்றும் தீவுகளை சித்தரிக்கும் வகையில் சிப்பி வடிவில் இந்த விமான நிலைய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், பகல் நேரங்களில் மின்விளக்குப் பயன்பாட்டை பெருமளவு குறைத்து சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்கும் வகையிலும் இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி மின் விளக்குகள், வெப்பத்தைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மழைநீரை சேகரிக்க ஏதுவாக பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தண்ணீர் தொட்டி, விமான நிலையத்திலேயே 100 சதவீதம் முழுமையாக கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான ஆலை, 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி மையம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கான கட்டமைப்புகள் போன்ற எண்ணற்ற நீடித்த மற்றும் நிலையான அம்சங்கள் இந்தப் புதிய விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தமான் நிகோபார் தீவுகளின் பழம்பெரும் நுழைவாயிலாக உள்ள போர்ட் பிளேர், சுற்றுலாவுக்கான முக்கிய இடமாகத் திகழ்கிறது. விரிவான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பன்னாட்டு விமான முனையம், விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதோடு சுற்றுலாவை மேம்படுத்தும். மேலும் இந்த விமான நிலையம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு இந்தத் தீவின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

 

 

 

                                                                                                               ***


SM/AP/RR/KPG

 



(Release ID: 1940118) Visitor Counter : 169