உள்துறை அமைச்சகம்

‘துடிப்புமிக்க கிராமங்கள் திட்டம்’ குறித்த பயிலரங்கை மத்திய உள்துறை மற்றும்கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்

Posted On: 23 MAY 2023 6:12PM by PIB Chennai

‘துடிப்புமிக்க  கிராமங்கள் திட்டம்’ குறித்த பயிலரங்கை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று  புதுதில்லியில் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதான நிலப்பரப்பில் உள்ள இதர கிராமங்கள் பெற்றிருக்கும் அனைத்து வசதிகளையும், எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்கள் பெற வேண்டும் என்ற அரசியல் சட்ட உணர்வின் அடிப்படையில், துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வடிவமைத்ததாக இந்த நிகழ்வில் பேசிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா  கூறினார். 2014-க்கு பின், எல்லைப்பகுதியில்  அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தப் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், எல்லைப்புற கிராமங்களுக்கான பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதாகவும் தற்போது, எல்லைப்புற கிராமங்களிலிருந்து புலம் பெயர்வதை நிறுத்துவதற்கு துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தை தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலா, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேளாண்மை, கைவினைத் தொழில்கள், கூட்டுறவு, அடிப்படை வசதிகளை அதிகரித்தல், மத்திய,மாநில அரசுத் திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றுதல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஐந்து முன்முயற்சிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் எல்லைப்புற கட்டமைப்புக்காக ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு செலவிட்டிருப்பதாக அவர் கூறினார். எல்லைப்பகுதியில் 1134 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஏறத்தாழ அனைத்து சோதனைச்சாவடிகளின் பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்கள், கடைசி கிராமங்கள் அல்ல. நாட்டின் முதலாவது கிராமங்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும் என்று திரு அமித் ஷா தெரிவித்தார். எல்லைப்புற கிராமங்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், எல்லைப்பகுதிகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்றும், இவற்றின் பாதுகாப்பு தேசப்பாதுகாப்போடு தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.  

நாடு சுதந்திரம் அடைந்தபின், பல பத்தாண்டுகள் எல்லைப்புற கிராமங்களின் மக்கள் மேம்பாட்டு நடைமுறையிலிருந்து  பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டனர் என்று கூறிய திரு அமித் ஷா, தற்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் மின்சாரம், சுகாதார வசதிகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை பெறுவதற்கான காலம் வந்துள்ளது என்றார்.

******

AP/SMB/RS/KRS



(Release ID: 1926741) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Marathi , Manipuri