கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7432 பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளது : மத்திய அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAR 2023 2:44PM by PIB Chennai
மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7432 பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்தூஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் 3,438 சார்ஜிங் நிலையங்களும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் 2,334 சார்ஜிங் நிலையங்களும், இந்தூஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் 1,660 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே நாடு முழுவதும் 6,586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. கூடுதலாக அமைக்கப்பட உள்ள இந்த 7,432 நிலையங்கள் நாட்டில் மின்சார வாகன பயன்பாடு தொடர்பான நடவடிக்கைகளை அதிகரிக்கும். இவை மார்ச் 2024-க்குள் அமைக்கப்படும். இந்த விரைவான மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், அனைத்து மெட்ரோ நகரங்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்கள், மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்கள் ஆகியவற்றில் அமைக்கப்படும். இந்த நடவடிக்கை பசுமை போக்குவரத்தை மேம்படுத்தும் என்று திரு மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
AD/PLM/MA/KRS
***
(வெளியீட்டு அடையாள எண்: 1911561)
வருகையாளர் எண்ணிக்கை : 335