பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பார்மர் சுத்திகரிப்பு ஆலை "பாலைவனத்தின் அணிகலனாகத்" திகழ்ந்து ராஜஸ்தான் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்: திரு. ஹர்தீப் சிங் பூரி

Posted On: 21 FEB 2023 1:46PM by PIB Chennai

பார்மர் சுத்திகரிப்பு ஆலை "பாலைவனத்தின் அணிகலனாகத்" திகழ்ந்து ராஜஸ்தான் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

 இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தின் கீழ் செயல்படும் ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலை லிமிடெட் நிறுவனத்தில் இன்று (21.02.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய அமைச்சர், பார்மர் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகிய தற்சார்பு இந்தியா மற்றும் "மேக் இன் இந்தியா" போன்றவற்றின்  வெளிப்பாடு என்றார்.

இந்தப் பசுமை சுத்திகரிப்பு ஆலை, எச்.பி.சி.எல்-ன் ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலை லிமிடெட் நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு போன்றவற்றின் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எச்.பி.சி.எல் -ன் ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலை லிமிடெட் நிறுவனம் 74 சதவீத பங்குகளையும், ராஜஸ்தான் மாநில அரசு 26 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 2013 ஆம் ஆண்டில் அதற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை மறுசீராய்வு செய்து பணிகள் தொடங்கப்பட்டன.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 பெருந்தொற்று போன்ற  பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தத் திட்டம் 60 சதவீதத்திற்கும் மேலாக முடிவடைந்துள்ளது.

எச்.பி.சி.எல்-ன் ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலை லிமிடெட் நிறுவனம் ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டது.  இதன் மூலம் 2.4 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யப்படும். இதனால் கச்சாப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிச்சுமை குறையும் என்று மத்திய அமைச்சர் கூறினார். மேற்கு  ராஜஸ்தான் பகுதியின் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்தத் திட்டம் அமைவதோடு, வரும் 2030 ஆண்டிற்குள் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையான  ஆண்டுக்கு 450 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் என்ற இலக்கை அடைவதற்கும் வழிவகை செய்யும் என்றார்.

தற்போது 95,000 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சாப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இந்தப் புதிய ஆலை செயல்பாட்டுக்கு வந்தால், 26,000 கோடி ரூபாய் அளவுக்கே கச்சாப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஆலை மூலம் நேரடியாக 35,000 பேருக்கும், மறைமுகமாக 1,00,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

***

AP/GS/SG/KRS



(Release ID: 1901085) Visitor Counter : 155