பிரதமர் அலுவலகம்
மத்திய பட்ஜெட் 2023 தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
01 FEB 2023 3:12PM by PIB Chennai
வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது. விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சருக்கும், அவரது குழுவினருக்கும் எனது பிரதமர் பாராட்டுக்கள்.
நண்பர்களே,
நாட்டை கட்டமைப்பதில் பாரம்பரியமிக்க கலை வல்லுனர்களான கலைஞர்கள், தச்சர்கள், இரும்பு மற்றும் பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பக் கலைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். படைப்பாற்றலுடன் கடுமையாக பணியாற்றும் இத்தகைய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல் முறையாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கலைஞர்களுக்கான பயிற்சி, கடனுதவி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
நண்பர்களே,
நகர்ப்புறங்கள் தொடங்கி கிராமப்புறங்கள் வரை பல்வேறு பணியில் உள்ள பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளின் வாழ்கை முறைகைளை எளிதாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுவசதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அளப்பரிய செயல்களை செய்யும் வகையில் அவை மேலும் வலுப்படுத்தப்படும்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்க இந்த பட்ஜெட் வகை செய்கிறது. அரசின் முன்னோடி திட்டமான புதிய முதன்மை கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இத்தகைய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீனவர்கள் உள்ளிட்டோர் தங்களது பொருட்களுக்கு நல்ல விலையை பெறமுடியும்.
நண்பர்களே,
வேளாண் துறையில் டிஜிட்டல் கட்டண முறையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கென டிஜிட்டல் வேளாண் கட்டமைப்புக்கான மிகப் பெரிய திட்டம் இந்தப் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.
உலக நாடுகள் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் பல்வேறு வகையான சிறுதானியங்கள் பல பெயர்களில் உள்ளன. உலகெங்கிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சிறுதானியங்கள் தற்போது சென்றடைகின்றன. இதன் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். மிகச் சிறந்த உணவான சிறுதானிய உணவுகளுக்கு புதிய அடையாளத்தை அளிக்கும் வகையில் ஸ்ரீ-அன்ன திட்டம் செயல்படுத்தப்படும்.
நண்பர்களே,
நீடித்த எதிர்காலத்திற்கு தேவையான பசுமை வளர்ச்சி, பசுமை பொருளாதாரம். பசுமை உள்கட்டமைப்பு மற்றும் பசுமை பணிகள் ஆகியவற்றை முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்கும் வகையில் சாலை, ரயில், மெட்ரோ, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து போன்ற ஒவ்வொரு துறையிலும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும். கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீடு 400 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
வளர்ச்சி அடைந்த மற்றும் செழிப்பான இந்தியா என்ற கனவை அடைவதில் நடுத்தர வர்க்கத்தினர் மிகப் பெரிய சக்தியாக திகழ்கின்றனர். நடுத்தரப் பிரிவு மக்களுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முடிவுகளை மேற்கொண்டுள்ளது. இதற்கென வரிகுறைப்பு, வருமான அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளில் எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் மீண்டும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி
***
PLM/RJ
(Release ID: 1896128)
Read this release in:
Gujarati
,
Malayalam
,
Kannada
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu