சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உச்சநீதிமன்றத்தின் வேலை நேரம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2023 5:23PM by PIB Chennai

நீதிமன்றங்களின் வேலை நேரம், வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அந்தந்த நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு  கூறியுள்ளார்.

 மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 145 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தின் நடைமுறை மற்றும் அதன் அமர்வுகள் மற்றும் விடுமுறைகளை உள்ளடக்கிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்குகிறது. அதன்படி, உச்ச நீதிமன்ற விதிகள், 2013, 27.05.2014 அன்று அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற விதிகள், 2013 இன் பகுதி I இன் இரண்டாவது ஆணை, உச்ச நீதிமன்ற அமர்வுகள், கோடை விடுமுறையின் காலம் மற்றும் நீதிமன்றத்தின் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை, கோடை விடுமுறை மற்றும் குளிர்கால விடுமுறையின் போது நீதிபதிகளின் அமர்வுகள் ஆகியவற்றை வழங்குகிறது. உச்ச நீதிமன்ற விதிகள், 2013, கோடை விடுமுறையின் காலம் ஏழு வாரங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, விடுமுறைகள் நூற்று மூன்று நாட்களுக்கு மிகாமல் இருக்க தலைமை நீதிபதியால் நிர்ணயிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு சராசரியாக 222 நாட்கள் உச்சநீதிமன்றம் வேலை செய்கிறது.

நீதிமன்றங்களுக்கு குறைந்தபட்ச கட்டாய வேலை நேரம் மற்றும் வேலை நாட்களை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தின் வேலை நாட்களையோ அல்லது வேலை நேரத்தையோ அதிகரிப்பதற்கான எந்த யோசனையும் தற்போது இல்லை. இருப்பினும், நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. நீதிபதிகள் தங்கள் பணிகளைச் சீராக செய்வதற்கு ஏற்ற சூழலை வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சிக்கிறது.

***

PKV/AG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 1895810) வருகையாளர் எண்ணிக்கை : 357
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu