இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கூச்பெஹாரில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரயில்வே சார்பில் அமைக்கப்படும் தேசிய உயர் திறன் மையத்தின் பூமி பூஜையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்பு
Posted On:
15 JAN 2023 7:12PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) மற்றும் ரயில்வேயின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படும் முதல் தேசிய உயர் திறன் மையத்தின் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. அனுராக் தாக்கூர் இந்த மையம் இந்தப் பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிக்கான களமாக அமையும் என்றார். அது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும் இது பயன்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சியில் இணைந்து இதை அமைக்க 20 ஏக்கர் நிலத்தை ரயில்வே வழங்கி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய விளையாட்டு மேம்பாட்டு அணையமும் ரயில்வேயும் இணைந்து இதுபோன்ற மையத்தை அமைப்பது இதுவே முதல் முறை என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வனி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திரு அனுராக் தாக்கூர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் திரு. நிஷித் பிரமாணிக், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பு, சரியான உணவு, சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றை இந்த மையம் வழங்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் திரு. ஜான் பர்லா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு. சந்தீப் பிரதான், இந்திய ரயில்வே பொதுமேலாளர் திரு அன்ஷுல் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*****
PLM / DL
(Release ID: 1891448)