குடியரசுத் தலைவர் செயலகம்
வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டுக்கு இடையே குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சுரினாம் அதிபருடன் பேச்சு நடத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JAN 2023 6:57PM by PIB Chennai
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறும் 17-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டுக்கு இடையே குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சுரினாம் அதிபர் திரு சந்திரிகா பெர்சாத் சந்தோகியுடன் இன்று பேச்சு நடத்தினார்.
சுரினாம் அதிபருடன் இந்தியா வந்துள்ள குழுவை வரவேற்ற திருமதி திரௌபதி முர்மு, 17-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் சுரினாம் அதிபர் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். சுரினாமில் உள்ள இந்திய சமுதாயத்தினர் இந்தியாவை விட்டுச்சென்று 150 ஆண்டுகள் கடந்த போதும், தங்களது கலாச்சார அடையாளங்களை மாறாமல் அவர்கள் பாதுகாத்து வருவதாக அவர் கூறினார். இந்தியர்கள் சுரினாம் சென்றதன் 150-வது ஆண்டு விழா 2023 –ஜூன் மாதத்தில் கொண்டாடப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், இந்த கொண்டாட்டங்கள் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவுக்கும், சுரினாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்து வருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். சுரினாமில் திறன்மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருதரப்பும் பயனடையும் வகையில், வர்த்தகத்தை இணைந்து மேம்படுத்த பணியாற்ற வேண்டும் என்றும் திருமதி திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
***
SMB/PLM/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1890099)
வருகையாளர் எண்ணிக்கை : 220