பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னையில் 24-வது தேசிய எண்ணெய்ப் படலம் பேரிடர் தற்செயல் திட்டம் மற்றும் தயார்நிலைக் கூட்டத்தை நடத்தியது இந்திய கடலோரக் காவல்படை

Posted On: 30 NOV 2022 3:33PM by PIB Chennai

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 24-வது தேசிய எண்ணெய்ப் படலம் பேரிடர் தற்செயல் திட்டம் மற்றும் தயார்நிலைக் கூட்டத்தை இந்திய கடலோரக் காவல்படை இன்று (30.11.2022) நடத்தியது. இந்தக் கூட்டத்தின் தலைவரும், இந்திய கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநருமான திரு வி எஸ் பதானியா, தலைமை வகித்தார். பல்வேறு மத்திய அமைச்சர்கள், மத்திய – மாநில அரசுத்துறைகள் மற்றும் முகமைகள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், துறைமுகங்கள், எண்ணெய்  நிறுவனங்கள் ஆகியவற்றின் சுமார் 100 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்திய கடல்பகுதியில், எண்ணெய் அல்லது ரசாயன படலம் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் கூட்டுத்தயார் நிலையை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரு வி எஸ் பதானியா, இந்தப் பிராந்தியத்திற்கும், வள ஆதாரங்களுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய கடலோரக் காவல் படை தயாராக உள்ளது என்று கூறினார். கசிவுகள் காரணமாக ஏற்படும் இந்த நிலைக்கு சமபந்தப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்வு காண முற்படவேண்டும் என்றும் சிறந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி சிறப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும்  அவர் கேட்டுக்கொண்டார்.

உலகிலேயே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்.  இந்தக் கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலமே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதே போல, ரசாயன இறக்குமதியிலும், உலகிலேயே 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. எண்ணெய் மற்றும் ரசாயன கசிவுகளால் ஏற்படும் கடல்சார் அபாயங்களுக்கும் தீர்வு காணப்படவேண்டும். கசிவுகளால் கடலோர மக்களுக்கும், கடல்சார் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

**************

(Release ID: 1879967)

SM/PKV/KPG/KRS


(Release ID: 1879985)
Read this release in: English , Urdu , Hindi