விவசாயத்துறை அமைச்சகம்
தொழில்நுட்பம் நாட்டை முழு வளர்ச்சி அடையச் செய்யும்: வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
Posted On:
15 NOV 2022 5:50PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிதாம்பூரில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் பசுமைப் பண்ணை இயந்திர ஆலையை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இன்று உலகமே நம்மை நம்பிக்கையுடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார். நாட்டை முழுமையாக வளர்ச்சியடையச் செய்ய, நாம் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை முழுமையாக பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
இயந்திரமயமாக்கலும் தொழில்நுட்பமும் இன்று மிகவும் தேவை என்று திரு தோமர் கூறினார். மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பருவநிலை மாற்றத்தின் சவாலும் நம் முன் உள்ளதாக அவர் தெரிவித்தார். நாம் நமது உற்பத்தித்திறனை அதிகரித்து உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்கும் அவற்றை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு இன்னும் நிறைய முயற்சிகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஜன்-தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும் அதில் இன்று ரூ 1.46 லட்சம் கோடி வைப்புத் தொகை உள்ளது எனவும் திரு தோமர் கூறினார். கொவிட் நெருக்கடியின் போது 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசின் நடவடிக்கைகளால் பெண்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி செய்து வரும் இந்த பணிகள் வரலாற்று சிறப்பு மிக்கவை என்றும் இது வெகு விரைவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை திரு தோமர் சுட்டிக் காட்டினார். அதை நிரூபிக்க நாமும் நமது பங்களிப்பைத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உயர்கல்வி படித்து வெளிநாட்டில் நல்ல வேலை வாய்ப்பில் இருந்தபோதும் பல இளைஞர்கள் இந்தியாவிற்குத் திரும்பி வந்து விவசாயத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
-----------
SG/PLM/RS/SMB
(Release ID: 1876237)