பிரதமர் அலுவலகம்

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 15 OCT 2022 11:30AM by PIB Chennai

மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ அவர்களே, இணையமைச்சர் திரு எஸ் பி பாகல் அவர்களே, மாநிலங்களின் சட்ட அமைச்சர்களே, செயலர்களே, இதில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகளே வணக்கம்!

மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மிக முக்கியமான முக்கியமான  கூட்டம், பிரம்மாண்டமான  ஒற்றுமை சிலையின் கீழ் நடைபெற்று வருகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் இந்தக் கட்டத்தில்,சர்தார் படேலின் உத்வேகமே சரியான திசையில் நம்மைக்  கொண்டு சென்று, நமது இலக்குகளை அடைய உதவும்.

நண்பர்களே, நம்மைப் போன்ற வளரும் நாட்டில் ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கையான சமுதாயத்திற்கு நம்பகமான மற்றும் விரைவான நீதி பரிபாலனம் அவசியமாகும்.  ஒவ்வொரு சமூகத்திலும் நீதித்துறை அமைப்பும் பல்வேறு நடைமுறைகளும் மரபுகளும் காலத்தின் தேவைக்கேற்ப வளர்ச்சியடைந்து வருகிறது. நீதி வழங்கப்படுவதைக் காணும்போது, அரசியலமைப்பு அமைப்புகளின் மீது நாட்டு மக்களின் நம்பிக்கை வலுப்பெறுகிறது. மேலும் நீதி வழங்கப்படும் போது சாமானியர்களின் நம்பிக்கை உயரும். நாட்டின் சட்டம் ஒழுங்கை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை.

 

இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் பயணம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. முக்கியமான சவால்களை எதிர்கொண்டாலும் நாம் நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நமது சமூகத்தின் மிகப்பெரிய அம்சம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் போது உள்நாட்டில் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் போக்கு ஆகும். ஒவ்வொரு அமைப்பும் சீராக இயங்குவதற்கு இது இன்றியமையாத தேவை. நமது சமூகம் பொருத்தமற்ற சட்டங்களையும் தவறான பழக்கவழக்கங்களையும் களைந்து கொண்டே இருக்கிறது. இல்லையெனில், எந்தவொரு பாரம்பரியமும் மரபுவழியாக மாறும்போது, அது சமூகத்திற்கு ஒரு சுமையாக மாறிவிடும்.

நண்பர்களே, கடந்த 8 ஆண்டுகளில், இந்தியா ஆயிரத்து ஐநூறுக்கும்  மேற்பட்ட பழைமையான சட்டங்களை ரத்து செய்துள்ளது.. புதுமை மற்றும் வாழ்க்கையின் எளிமைக்கான பாதையைத் தடுக்கும் சட்டத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களில் பல அடிமைத்தன காலத்திலிருந்தே தொடர்கின்றன. மேலும், அடிமை முறையிலான பல பழைய சட்டங்கள் மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. இந்த மாநாட்டில் இதுபோன்ற சட்டங்களை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த விடுதலையின் அமிர்த காலத்தில் , அடிமைத்தன காலம் முதல் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஒழித்து புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது. நீண்ட காலமாக இந்தியாவின் கிராமங்களில் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் மாற்று தாவா தீர்வுகளை மேற்கொள்ளலாம்.  மாநிலங்களில் உள்ளூர் மட்டத்தில் சட்ட அமைப்பின் ஒரு பகுதியாக அதை எவ்வாறு மாற்றுவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத்தில் நான்  முதலமைச்சராக இருந்த போது,  மாலை நேர நீதிமன்றங்கள் என்ற கருத்தை அப்போதைய அரசு அறிமுகப்படுத்தியது. பிரிவுகளின் அடிப்படையில் குறைவான தீவிரம் கொண்ட  வழக்குகள் மாலை நீதிமன்றங்களால் எடுக்கப்பட்டன, இதன் விளைவாக குஜராத்தில் சமீபத்திய ஆண்டுகளில் 9 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளை தீர்ப்பதற்கும், நீதிமன்றங்களின் சுமையை குறைப்பதற்கும் வழிவகுத்த லோக் அதாலத்களால், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் அதன் பாதிப்பைச் சுமக்க வேண்டியது சாமானியக் குடிமக்களே, நோக்கம் எதுவாக இருந்தாலும், சாதாரண குடிமக்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. நீதியைப் பெறுவதற்கு அலைய வேண்டியுள்ளது. சட்டம் சாமானியனுக்குப் புரியும் போது, அதன் பலனே வேறு.

நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ சட்டம் இயற்றப்படும்போது, அதை சட்டத்தின் வரையறைக்குள் விரிவாக விளக்கவும், சாதாரண மனிதனால் புரிந்து கொள்ளக்கூடிய, எளிதாகச் சொல்லக்கூடிய மொழியில் சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்க வேண்டும். சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவைத் தீர்மானிப்பதுடன், புதிய சூழ்நிலையில் சட்டம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். நீதியை எளிதாக்குவதற்கான சட்ட அமைப்பில் உள்ளூர் மொழி பெரும் பங்கு வகிக்கிறது. தாய்மொழியில் இளைஞர்களுக்கான கல்விச் சூழலையும் உருவாக்க வேண்டும். சட்டப் படிப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும், நமது சட்டங்கள் எளிய மொழியில் எழுதப்பட வேண்டும், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் உள்ள முக்கியமான வழக்குகளின் டிஜிட்டல் நூலகங்கள் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும்.

நண்பர்களே, சமூகத்துடன் நீதித்துறையும் வளரும்போது, அது நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் இயல்பான போக்கைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நீதி அமைப்பு மூலமாகவும் தெரியும். நீதித்துறை அமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.நாட்டில் 5ஜி வருகையுடன் இந்த அமைப்புகள் பெரும் ஊக்கத்தைப் பெறும். ஒவ்வொரு மாநிலமும் அதன் அமைப்புகளைப் புதுப்பித்து மேம்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதை தயாரிப்பது நமது சட்டக் கல்வியின் முக்கிய குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.

விசாரணைக் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறையுடன் மாநில அரசுகள் செயல்பட வேண்டும், இதனால் நீதித்துறை மனித இலட்சியங்களுடன் முன்னேற வேண்டும். திறமையான நாடு  மற்றும் நல்லிணக்கமான சமுதாயத்திற்கு ஒரு உணர்வுபூர்வமான நீதி அமைப்பு அவசியம்.

நண்பர்களே, அரசு, நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் என மூன்றுமே ஒரு வகையில் ஒரே தாயின் குழந்தைகள்தான். செயல்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு  பார்த்தால், வாக்குவாதத்திற்கோ போட்டிக்கோ இதில் இடமில்லை. ஒரு தாயின் குழந்தைகளைப் போல, மூன்று அமைப்புகளும்  இணைந்து தாய் பாரதிக்கு சேவை செய்ய வேண்டும், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

*********

PKV/SM/DHA



(Release ID: 1868195) Visitor Counter : 571