பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத் தளபதி பங்களாதேஷில் மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 17 JUL 2022 6:06PM by PIB Chennai

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்து, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நாளை முதல் 20ந்தேதி வரை அந்நாட்டுக்குப்  பயணம் மேற்கொள்கிறார். ராணுவத்தளபதி பொறுப்பேற்ற பின்னர்  ஜெனரல் மனோஜ் பாண்டே மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

1971 போரின்போது உயிர்நீத்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு பயணத்தின் முதல்கட்டமாக நாளை ஷிகா அனிர்பானில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் ராணுவ தளபதி, பாதுகாப்பு குறித்து மூத்த அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்துவார். தன்மோண்டியில் உள்ள தேசத் தந்தை வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவு அருங்காட்சியகத்திற்கும் அவர் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

 பயணத்தின் இரண்டாவது நாளில், ராணுவத் தளபதி மிர்பூரில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பணியாளர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றுகிறார். அதன்பிறகு, பல்வேறு ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பணியமர்த்துவதற்காக அமைதிப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பங்களாதேஷின் முதன்மையான நிறுவனமான வங்கதேச அமைதி ஆதரவு மற்றும் செயல்பாட்டு பயிற்சியின் (BIPSOT) உறுப்பினர்களை அவர் பார்வையிட்டு உரையாடுவார். இதைத் தொடர்ந்து மிர்பூரில் உள்ள வங்கபந்து ராணுவ அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவார்.

ராணுவத்தளபதியின்  வருகை இரு படைகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பல பாதுகாப்பு உத்தி பிரச்சினைகளில் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான உந்துசக்தியாக செயல்படும்.

***************



(Release ID: 1842230) Visitor Counter : 198