சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்தப் பகுதியில் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதாக சென்னையில் மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் பேச்சு

Posted On: 22 MAY 2022 6:26PM by PIB Chennai

தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்தப் பகுதியில் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்தான அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். சர்வதேச பல்லுயிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று சிறப்பு கண்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் திரு சிவ. வி. மெய்யநாதன், ஆகியோருடன் இணைந்து, சிறப்பு நினைவு அஞ்சல் உறை ஒன்றையும் ‘இந்தியா நேச்சுரல்' என்ற தலைப்பிலான புத்தகத்தையும் வெளியிட்டு, இந்தியா பல்லுயிர் விருதுகள் 2021-ஐ திரு புபேந்தர் யாதவ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இயற்கை வளங்களின் பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். “உலகின் இயற்கையான வாழும் உள்கட்டமைப்புகளையும், சர்வதேச பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு அத்தியாவசியமான பொருட்களையும், சேவைகளையும் பல்லுயிர் அளிக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் சுமார் 40%, பல்லுயிர் சார்ந்த பொருட்கள் மற்றும் செயல்முறைகளை அடிப்படையாக கொண்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் என்ற சவாலை நாம் எதிர் கொண்டால் மட்டுமே பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சி முழு வெற்றி அடையும். உலக வெப்பமயமாதலை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தினார்.

தேசிய அளவில் பல்லுயிர் இலக்குகளை அடையும் பாதையில் நாடு முன்னேறுவதுடன், சர்வதேச பல்லுயிர் இலக்குகளை அடைவதை நோக்கிய முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா வழங்கி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  
அரசு மற்றும் பொது சமூக நிறுவனங்களின் முயற்சிகளால் செம்பாக்கம் ஏரியில் அறிவியல் அடிப்படையிலான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு புபேந்தர் யாதவ் கூறினார். இத்தகைய சுற்றுச்சூழல் புனரமைப்புப் பணிகள் நாட்டில் உள்ள இதர நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாம்பின் விஷத்தை ஐசெரா பல்லுயிர் தனியார் நிறுவனம் அணுகும் வகையில், தேசிய பல்லுயிர் ஆணையமும் தமிழ்நாடு பல்லுயிர் வாரியமும், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் படி, வருடம்தோறும் பாம்பு விஷத்திலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் 5%, இருளர் மக்களின் நலனுக்காக இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தப்படும். பல்லுயிர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தகைய கூட்டுமுயற்சிகள் அவசியம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

****
 



(Release ID: 1827452) Visitor Counter : 219


Read this release in: English , Urdu , Hindi