மத்திய அமைச்சரவை

அடல் புத்தாக்க இயக்கத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 APR 2022 3:54PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடல் புத்தாக்க இயக்கத்தை (ஏஐஎம்) 2023 மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. நாட்டில் தொழில் முனைவு சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அடல் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது.

அடல் புத்தாக்க இயக்கத்தின் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இலக்குகள் வருமாறு-

  • 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை ஏற்படுத்துதல்
  • 101 அடல் இன்குபேஷன் மையங்களை உருவாக்குதல்
  • 50 அடல் சமுதாய புத்தாக்க மையங்களை உருவாக்குதல்
  • அடல் புதிய இந்தியா சவால்களின் மூலம் 200 ஸ்டார்ட் அப்-களுக்கு ஆதரவளித்தல்  

2015 ஆம் ஆண்டில் பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் அறிவித்ததற்கு இணங்க இந்த இயக்கம் நித்தி ஆயோக்கின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தொழில் முனைவு சூழல் மற்றும் புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, பள்ளி, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்கள், எம்எஸ்எம்இ, தொழிற்சாலைகள் அளவில் அடல் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது.  உள்கட்டமைப்பு உருவாக்கம், நிறுவன கட்டமைப்பு ஆகியவற்றில் இது கவனம் செலுத்தியுள்ளது. தேசிய அளவிலும், உலக அளவிலும் இந்த இயக்கம் புத்தாக்க சூழலியலை ஒருங்கிணைக்க பாடுபட்டு வருகிறது.

அடல் புத்தாக்க இயக்கம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தாக்க உணர்வை ஊட்டியுள்ளது. இந்த இயக்கத்தின் ஆதரவுடன் ஸ்டார்ட் அப்-கள் ரூ.2,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டை ஈர்த்துள்ளதுடன் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளனர். தேசிய நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு செயல்பாடுகளை ஏஐஎம் செயல்படுத்தி வருகிறது.

மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து ஏஐஎம் மேலும் அதிக பொறுப்புணர்வுடன் அனைவருக்குமான புத்தாக்க சூழலை உருவாக்க வழி ஏற்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814821

 

****



(Release ID: 1814851) Visitor Counter : 307