கனரகத் தொழில்கள் அமைச்சகம்

வாகனத் தொழில் மற்றும் உதிரிபாக தொழிலுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் வெற்றிகரமாக முதலீட்டை ஈர்த்துள்ளது

Posted On: 15 MAR 2022 12:45PM by PIB Chennai

வாகனத் தொழில் மற்றும் உதிரிபாக தொழிலுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம், ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்த ரூ.42,500 கோடியை விஞ்சி ரூ.74,850 கோடி  முதலீட்டை வெற்றிகரமாக ஈர்த்துள்ளது.  அசல் உபகரண உற்பத்தியாளர் சாம்பியன் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து ரூ.45,016 கோடி உத்தேச முதலீடும், உதிரிபாக சாம்பியன் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து ரூ.29,834 கோடி உத்தேச முதலீடும் வந்துள்ளன.

இந்தியாவில் வாகன மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 115 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. இதில் 5 வாகன அசல் உபகரண உற்பத்தி நிறுவனங்கள், இரண்டு திட்டங்களுக்கும் விண்ணப்பித்திருந்தன. 2021 செப்டம்பர் 23-ந் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.  2022 ஜனவரி 9-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 இந்தத் திட்டத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு, பிரதமரின் தற்சார்பு இந்தியா அழைப்பிற்கு இணங்க, இந்தியாவின் முன்னேற்றத்தின் மீது தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய கனரக தொழில் துறை  அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே கூறியுள்ளார். இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியா தூய்மையான, நீடித்த, நவீனத்துவம் மற்றும் செயல்திறன் வாய்ந்த மின்சார வாகனங்களை தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806077

***************



(Release ID: 1806144) Visitor Counter : 415


Read this release in: English , Urdu , Hindi