பாதுகாப்பு அமைச்சகம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய 121 ஒப்பந்தங்கள் : மாநிலங்களவையில் தகவல்

Posted On: 14 MAR 2022 3:05PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு. அஜய் பாட், மாநிலங்களவையில் எம்.பி. திரு வைகோ எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

நாட்டில் ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் வடிவமைத்து, உற்பத்தியை மேம்படுத்துவதை ஊக்குவிக்க, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பல கொள்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறை -2020-ன் கீழ், தளவாட  பொருட்களை உள்நாட்டில் கொள்முதல் செய்ய இந்த நடவடிக்கைகள் முன்னுரிமை அளிக்கின்றன. பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய 2851 தளவாடப் பொருட்கள், 209 சேவைகள் அடங்கிய பட்டியல் அறிவிக்கப்பட்டது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட இந்திய தொழில்துறைக்கு உதவ ஸ்ரீஜன் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கான முதலீடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.  உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

155எம்எம் தனுஷ்பீரங்கி, தேஜஸ் இலகு ரக விமானம், ஆகாஷ் ஏவுகணை, அர்ஜூன், டி-90, டி-72 பீரங்கி வண்டிகள், இலகு ரக ஹெலிகாப்டர், டார்னியர் டிஓ-228 ரக விமானம், லாரிகள், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் கந்தேரி, ஐஎன்எஸ் சென்னை போன்ற போர்கப்பல்கள், அர்ஜூன் கவச வாகனம் உள்ளிட்ட பல ராணுவ தளவாடங்கள் , கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 கடந்த 2018-19ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ராணுவ தளவாட கொள்முதலுக்கு ரூ.2,47,515 கோடி மதிப்பில் 150 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில், தளவாட பொருட்களின் கொள்முதலுக்கு 191 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் 121 ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களிடம் கையெழுத்திடப்பட்டன.

****



(Release ID: 1805899) Visitor Counter : 210


Read this release in: English , Urdu