அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாளை மாலை நடைபெறும், வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில், 1000 டிரோன்களை வானில் பறக்கவிடுகிறது இந்திய தொடக்க நிறுவனம் ‘போட்லேப்’

Posted On: 28 JAN 2022 4:20PM by PIB Chennai

குடியரசு தின விழாக்  கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக நாளை மாலை நடைபெறும் ‘வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில்’  அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவி பெற்ற ,போட்லேப் டயனாமிக்ஸ் என்ற தொடக்கநிலை நிறுவனம் 1000 டிரோன்களை பறக்கவிட்டு, வானில் 3டி ஒளிக்காட்சியை நடத்தவுள்ளதாக  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.  .

 

சீனா, ரஷ்யா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக, மிகப் பிரம்மாண்ட ஒளிக் கண்காட்சியில் 1000 டிரோன்களை பயன்படுத்தும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என அவர் கூறினார்.

 

டிரோன்கள்  செயல்முறை விளக்க நிகழ்ச்சியில், போட்லேப் தொடக்க நிலை நிறுவனத்தின் குழுவினருடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடினார்.

போட்லேப் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு  தொடக்க நிதியாக ரூ.1 கோடியும், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கியது எனவும், அதைத் தொடர்ந்து இந்தியாவில் இதன் தொழில்நுட்ப திட்டத்தை மேம்படுத்த ரூ.2.5 கோடி தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தால் வழங்கப்பட்டதாகவும்  டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். தொடக்கநிலை நிறுவனங்களின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கை நிறைவேற்ற, இது போன்ற புதுமையான மற்றும் நிலையான தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவ அரசு உறுதியுடன் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

போட்லேப் டைனமிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரிதா அலாவத் கூறுகையில், ‘‘ ஹார்டுவேர் தொடக்கநிலை நிறுவனங்களை வழிநடத்தத்  தனியார் நிறுவனங்கள் தயங்குகின்றன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியால், இந்த டிரோன் திட்டம் வெற்றியடைந்தது’’ எனக்  கூறினார்.  இதற்காக மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்குக்கு, அவர் நன்றி தெரிவித்தார்.

 

தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியை பெற்ற 6 மாதத்துக்குள், 1000 டிரோன்களை, ஐஐடியில் போட்லேப் டைனமிக்ஸ் நிறுவனம் உருவாக்கியதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த டிரான்களில் உள்ள ஹார்டுவேர், சாஃப்ட்வேர், பிளைட் கட்டுப்பாட்டு கருவிகள், ஜிபிஎஸ், தரைகட்டுப்பாட்டு நிலையம் அனைத்தும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை என டாக்டர் ஜித்தேந்திர சிங் பெருமையுடன் கூறினார்.

‘‘75வது சுதந்திர ஆண்டைக்  கொண்டாட, பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த ‘டிரோன் ஒளி கண்காட்சியை  போட்லேப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 10 நிமிடங்கள் நடைபெறும் இந்த ஒளிக் கண்காட்சியில், 75ம் ஆண்டில் மத்திய அரசின் சாதனைகள் ஒளி வடிவமைப்புகள் மூலம் இருண்ட வானப் பின்னணியில்  காட்டப்படும்’’ என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793266

                                                                                **********************

 



(Release ID: 1793371) Visitor Counter : 209


Read this release in: English , Urdu , Hindi , Telugu