இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டிஜிட்டல் உபகரணங்களுக்கு அடிமை ஆக வேண்டாம் என்று இளைஞர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் எச்சரிக்கை

Posted On: 08 OCT 2021 7:51PM by PIB Chennai

கைப்பேசிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் இடாநகரில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், தொழில்முனைவோர் மற்றும் மலையேறுபவர் ஆகிய பல்துறை சாதனையாளர்களுடன் உரையாடிய அவர், டிஜிட்டல் சாதனங்களின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் இணையத்தில் அதிகப்படியான சார்பு ஆகியவற்றிற்கு எதிராக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். "படைப்பாற்றல் மற்றும் சுய சிந்தனையை இது அழிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

பாலின பாகுபாடு மற்றும் போதை பழக்கம் போன்ற பல்வேறு சமூக தீமைகள் குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களை குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகள் மற்றும் இயற்கையையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கபடி போன்ற இந்திய விளையாட்டுகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இளைஞர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், உடல் நலனின் முக்கியத்துவத்தை கொவிட்-19 கற்றுக்கொடுத்துள்ளது என்றார். "ஒருவர் உடல் தகுதியுடன் இருந்தால் தான் மனதளவில் விழிப்புடன் இருக்க முடியும்", என்றார் அவர்.

"பகிர்வு மற்றும் அக்கறை" என்ற மனப்பான்மையை இளைஞர்களிடையே வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் திரு நாயுடு வலியுறுத்தினார். "பகிர்வதும் அன்பு செலுத்துவதும் இந்திய தத்துவத்தின் அடிப்படை", என்று அவர் கூறினார்.

அருணாச்சலப் பிரதேச ஆளுநர், பிரிகேடியர் (டாக்டர்) பி டி மிஸ்ரா (ஓய்வு), அருணாச்சல பிரதேச முதல்வர் திரு பேமா காண்டு மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*****************



(Release ID: 1762267) Visitor Counter : 222


Read this release in: Kannada , Tamil , English , Urdu