குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உடல்நலம் என்பது நோய் இல்லாதது மட்டுமல்ல; முழுமையான ஆரோக்கியத்தில் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனும் அடங்கியுள்ளன: குடியரசு துணைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2021 12:00PM by PIB Chennai
‘‘உடல்நலம் என்பது நோய் இல்லாதது மட்டுமல்ல, முழுமையான ஆரோக்கியத்தில், உடல், மனம் மற்றும் ஆன்மீக நலன்களும் அடங்கியுள்ளன என்ற முழுமையான கண்ணோட்டம் வேண்டும். இது ஒரு தனிநபர், முழு ஆற்றலை அடைய அதிகாரம் அளிக்கிறது’’ என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
என்டிடிவியின் ‘ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குதல்’ நிகழ்ச்சிக்கு வீடியோ தகவல் மூலம் ஆற்றிய உரையில் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியதாவது:
ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறைதான், ஆரோக்கிய இந்தியாவின் நோக்கம். இது இறுதியில் செழிப்பான இந்தியாவுக்கு வழிவகுக்கும்.
சுகாதார குறியீடுகளை மேலும் மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள், புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரத்துக்கான பொது செலவை அதிகரிப்பதோடு, அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் சுகாதார கட்டமைப்புகளை பல நிலைகளில் அதிகரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையே சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை போக்க வேண்டும். ஊரக பகுதிகளில் 3 ஆம் நிலை கவனிப்பை கொண்டுவரும்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களை நாம் பலப்படுத்துவதும் அவசியம். மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இது கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு, சுகாதார உறுதியை வழங்கியுள்ளது.
இந்தியாவில் தொற்றற்ற நோய்களும் அதிகரிக்கின்றன. வாழ்க்கை முறை நோய்கள் பற்றி, மக்களிடம் சுகாதார நிபுணர்கள், பிரபலங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கொவிட் தொற்றின் போது, மக்களுக்கு முன்களப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நமது மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழ் உள்ளனர். அதனால் இளைஞர்கள் ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். யோகா, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பணிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். டிஜிட்டல் உபகரணங்களுக்கு அடிமையாவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.
முக்கிய சுகாதாரம் மற்றும் உடல்நலன் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்த என்டிடிவி சரியான நேரத்தில் முக்கியமான நடவடிக்கையை தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760557
(வெளியீட்டு அடையாள எண்: 1760580)
வருகையாளர் எண்ணிக்கை : 438