வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
முதலீடுகளுக்கான இந்திய-ஐக்கிய அரபு எமிரேட் உயர்மட்ட கூட்டு பணிக்குழுவின் ஒன்பதாவது கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2021 6:54PM by PIB Chennai
துபாயில் இன்று நடைபெற்ற முதலீடுகளுக்கான இந்திய-ஐக்கிய அரபு எமிரேட் உயர்மட்ட கூட்டு பணிக்குழுவின் ஒன்பதாவது கூட்டத்திற்கு அபுதாபி அமீரகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மேன்மைமிகு ஷேக் ஹமீத் பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் மத்திய வர்த்தகம் & தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியுஷ் கோயல் ஆகியோர் இணைந்து தலைமை வகித்தனர். இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை ஊக்கப்படுத்துவதற்கான முக்கிய அமைப்பாக 2013-ம் ஆண்டு கூட்டு பணிக்குழு அமைக்கப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு படைகளின் துணை தலைமை தளபதியுமான மேன்மைமிகு ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோருக்கிடையே 2017 ஜனவரி மாதம் கையெழுத்தான இருநாடுகளுக்கு இடையேயான விரிவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் வாயிலாக பொருளாதார உறவுகள் மேலும் வலுவடைந்தன.
கூட்டு பணிக்குழுவின் ஒன்பதாவது கூட்டத்தில், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் மீது கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து இருதரப்பும் விவாதித்தன. இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான பொருளாதார உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்த இருதரப்பும் உறுதி எடுத்துக்கொண்டன.
இந்த கடினமான காலகட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் இடையேயான ஒத்துழைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இருதரப்பும், பெருந்தொற்றை எதிர்த்து போராட இருநாடுகளின் தலைவர்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கூட்டு பணிக்குழுவின் சிறப்பான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நேர்மறை விளைவுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பரஸ்பர ஆர்வம் உள்ள துறைகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக முதலீடுகளை தொடர்ந்து ஊக்குவிக்க இருதரப்பும் ஒத்துக்கொண்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1760406
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1760439)
வருகையாளர் எண்ணிக்கை : 342