மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்தை கட்டமைத்தல் குறித்த தேசிய வலைதள கருத்தரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2021 5:18PM by PIB Chennai

பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்தை கட்டமைத்தல் குறித்த தேசிய வலைதள கருத்தரங்கை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை இணைந்து இன்று நடத்தின. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7-ஆம் தேதி வரை நடைபெறும் சிறந்த ஆளுகை குறித்த இணையதள கருத்தரங்க தொடரின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய வர்த்தக இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் துவக்க உரை வழங்கினார். செயலாளர் திரு அமித் காரே, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் டி.பி.சிங், கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், பாலின சமத்துவம் என்பது பெண்களுக்கு மட்டும் அனுகூலமானது அல்ல, சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மையை விளைவிக்கும் என்று கூறினார். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமமான பங்களிப்பை வழங்குவதற்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை, சம பங்கு மற்றும் சம வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வளங்களுக்கான பெண்களின் அணுகல், வாழ்க்கை மீதான அவர்களது கட்டுப்பாடு மற்றும் முடிவெடுக்கும் உரிமைகள் ஆகியவற்றை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை திருமதி படேல் மீண்டும் வலியுறுத்தினார். பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மக்கள் நிதி திட்டம், உஜ்வாலா திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757012

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1757082) வருகையாளர் எண்ணிக்கை : 1708
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi