இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒரே நாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியாவின் வெற்றி பயணம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்கிறது
Posted On:
30 AUG 2021 8:28PM by PIB Chennai
பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமித் அந்தில் தங்கம் வென்றதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் சுமித் அந்தில் தங்கம் வென்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நாட்டுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. தங்கம் வென்று புதிய உலக சாதனையை படைத்ததற்காக பாராட்டுகள். மேடையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை கேட்ட ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியடைந்தனர். நீங்கள் ஒரு உண்மையான வீரர்,” என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
“பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது தடகள வீரர்கள் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறார்கள்! பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் சாதனை படைத்த சுமித் அந்திலால் நாடு பெருமை கொள்கிறது. மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற சுமித்துக்கு வாழ்த்துகள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. பாராலிம்பிக்கில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதற்காக சுமித் அந்திலுக்கு வாழ்த்துகள். மிகச்சிறந்த ஈட்டி எறிதல், ஊக்கமளிக்கும் சாதனை,” என்று விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
23 வயதான சுமித் அந்தில், மல்யுத்தத்தில் இருந்து ஈட்டி எறிதலுக்கு 2018-ம் ஆண்டு தான் மாறினார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் அவர் பயிற்சி பெற்றார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில், இடது காலை இழந்த அவர், செயற்கை காலை பொருத்திக் கொண்டு இந்த சாதனை படைத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750552
-----
(Release ID: 1750588)