திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

நமது கல்வி நிறுவனங்களை உலகத்தரம் மிக்கவையாக தேசிய கல்விக்கொள்கை மாற்றும்: மத்திய கல்வி அமைச்சர்

Posted On: 20 AUG 2021 5:04PM by PIB Chennai

தேசத்திற்கே முன்னுரிமை எனும் உணர்வோடு, 21-ம் நூற்றாண்டுக்கான தற்சார்பு இந்தியாவை வழிநடத்துபவர்களாக இளைஞர்கள் இருப்பார்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார். ஐஐடி-புவனேஸ்வரில் புஷ்பகிரி அரங்க வளாகம் மற்றும் ரிஷிகுல்யா தங்கும் வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

ஐஐடி-புவனேஸ்வர் இயக்குநர் பேராசிரியர் ஆர் வி ராஜகுமார் மற்றும் புவனேஸ்வர் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் திரு ரஞ்சன் குமார் மொகபத்ரா ஆகியோருக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் முன்னிலையில் கையெழுத்தானது.

வேலை இல்லாதோர், வேலை தேடுவோர் மற்றும் ஏழை மாணவர்களின் திறன்களை தொழில்நுட்ப கல்வியின் மூலம் வளர்த்து, ஐஐடி புவனேஸ்வரின் வழிகாட்டுதலின் கீழ் தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப அவர்களை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரிடையே உரையாற்றிய அமைச்சர், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக கூறினார்.

நாட்டின் கல்வி துறையை மாற்றியமைக்கும் வகையில், குறைந்த செலவு, அனைவருக்கும் அணுகல், சமதளம் மற்றும் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அரசு கொண்டு வந்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

அது வெறும் கொள்கை அல்ல என்று கூறிய திரு பிரதான், நமது எதிர்காலத்திற்கான லட்சிய ஆவணமாக தேசிய கல்விக் கொள்கை திகழ்வதாகவும், மாணவர்களுக்கு அதிகாரமளித்து அவர்களை சார்ந்த கல்வி அமைப்பை உருவாக்குவதை அது நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். நமது உயர்கல்வி நிறுவனங்களை உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக தேசிய கல்விக்கொள்கை மாற்றும் என்றும் அவர் கூறினார்.

*****************



(Release ID: 1747697) Visitor Counter : 203


Read this release in: Marathi , English , Urdu , Hindi