பிரதமர் அலுவலகம்

சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று பிரதமர் திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 18 AUG 2021 5:53PM by PIB Chennai

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார். சோம்நாத் நடை பாதை, சோம்நாத் கண்காட்சி மையம் மற்றும் புனரமைக்கப்பட்ட பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

ஆன்மிக மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ 47 கோடி மொத்த மதிப்பீட்டில் சோம்நாத் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வசதி மைய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சோம்நாத் கண்காட்சி மையம், பழைய சோம்நாத் கோயிலின் பாகங்களையும், பழைய சோம்நாத்தின் நாகர் முறையிலான கோயில் கட்டிடக்கலை சிற்பங்களையும் கொண்டுள்ளது.

ரூ 3.5 கோடி மொத்த மதிப்பீட்டில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையால் பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டுள்ளது. கோயில் சிதிலமடைந்ததை கண்ட இந்தோர் அரசி அஹில்யாபாய் இந்த கோயிலை கட்டியதால் அஹில்யாபாய் கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிக இடவசதியுடன் மொத்த பழைய கோயில் வளாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது.

ரூ 30 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீ சிவ பார்வதி கோயில் கட்டப்படவுள்ளது. சோம்புரா சலத்ஸ் முறையில் கட்டப்படவுள்ள கோயில் கட்டிடம், கருவறை கட்டமைப்பு மற்றும் நிரித்ய மண்டபம் ஆகியவை இதில் அடங்கும்.

மத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுற்றுலா அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

-----



(Release ID: 1747079) Visitor Counter : 286