குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பிரத்தியேக நெகிழி-கலந்த கையால் செய்யப்பட்ட காகிதம் காப்புரிமையை பெற்றது

Posted On: 05 AUG 2021 2:45PM by PIB Chennai

நெகிழியால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட நெகிழி-கலந்த கையால் செய்யப்பட்ட காகிதம் காப்புரிமையை பெற்றுள்ளது. இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் காப்புரிமை கட்டுப்பாட்டாளரால் ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் குமரப்பா தேசிய கையால் செய்யப்படும் காகித நிறுவனத்திற்கு 2021 ஆகஸ்ட் 2 அன்று காப்புரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

நெகிழி-கலந்த கையால் செய்யப்படும் காகிதத்திற்கான யோசனை 2018 செப்டம்பரில் உதித்த நிலையில், வெறும் இரண்டே மாதங்களில், அதாவது 2018 நவம்பரில், குமரப்பா தேசிய கையால் செய்யப்படும் காகித நிறுவனத்தின் விஞ்ஞானிகளால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ரீபிளான் (இயற்கையில் நெகிழியின் அளவை குறைத்தல்) எனும் திட்டத்தின் கீழ் நெகிழி-கலந்த கையால் செய்யப்படும் காகித திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தில், நெகிழி கழிவு மறுசுழற்சிக்குள்ளாக்கப்பட்டு காகிதக் கூழுடன் கலந்து காகிதமாக மாற்றப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை எதிர்த்து போராடுவதற்கான பிரதமரின் அறைக்கூவலோடு இந்த கண்டுபிடிப்பு ஒத்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் நீடித்த வேலைவாய்ப்பு ஆகிய இரண்டு நோக்கங்களை எட்டும் விதத்தில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் மாநில காதி வாரியங்களின் கீழ் இயங்கும் சுமார் 2640 கையால் காகிதம் செய்யும் நிறுவனங்களுக்கு வருடத்திற்கு 3000 மெட்ரிக் டன் நெகிழி கழிவை கையாளும் திறன் உண்டு.

பைகள், கவர்கள், கோப்புறைகள் உள்ளிட்ட பொருட்களையும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நெகிழி-கலந்த கையால் செய்யப்பட்ட காகிதத்தின் மூலம் உருவாக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742710

-----

 



(Release ID: 1742837) Visitor Counter : 352


Read this release in: Hindi , English , Bengali , Telugu