விவசாயத்துறை அமைச்சகம்

தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்திக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் வெளியீடு

Posted On: 15 JUL 2021 6:05PM by PIB Chennai

2020-21-ஆம் ஆண்டிற்கான பல்வேறு தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்திக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர அரசின் முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அரசின் விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகள்விவசாயிகளின் கடுமையான உழைப்பு மற்றும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியால் 2020-21 ஆம் ஆண்டில் தோட்டக்கலைத் துறையின் உற்பத்தி 329.86 மில்லியன் டன்னாக உயர்ந்திருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இதுவரையிலான உற்பத்தி மதிப்பீடுகளில் இதுவே மிக அதிகமாகும். 2019- 20-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த மதிப்பீடு 9.39 மில்லியன் டன் (2.93%)  அதிகமாகும்.

இந்த மதிப்பீட்டின்படி நடப்பாண்டில் பழங்களின் உற்பத்தி 102.76 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த 2019-20-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 102.08 மில்லியன் டன்னாக இருந்தது. அதேபோல, கடந்த ஆண்டு 188.28 மில்லியன் டன்னாக இருந்த காய்கறிகளின் உற்பத்தி, நடப்பாண்டு 4.42% அதிகரித்து, 196.27 மில்லியன் டன்னாக இருக்கக்கூடும்.

வெங்காயத்தின் உற்பத்தி 26.92 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2019-20-ஆம் ஆண்டில் 26.09 மில்லியன் டன்னாக இருந்தது. அதேபோல உருளைக்கிழங்கின் உற்பத்தி கடந்த ஆண்டின் 48.56 மில்லியன் டன்னைவிட 10.55% கூடுதலாக 53.69 மில்லியனாகவும், தக்காளியின் உற்பத்தி 2019-20-ஆம் ஆண்டின் 20.55 மில்லியன் டன்னை விட கூடுதலாக 21.00 மில்லியன் டன்னாகவும் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735922

*****************



(Release ID: 1735961) Visitor Counter : 293


Read this release in: English , Urdu , Hindi