ஜல்சக்தி அமைச்சகம்

மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களில் உள்ள 97 லட்சம் வீடுகளுக்கு வெறும் 22 மாதங்களில் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 10 JUL 2021 2:35PM by PIB Chennai

ஜப்பானிய மூளை அழற்சி - தீவிர மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தூய்மையான குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக, அத்தகைய 61 மாவட்டங்களில் உள்ள 97 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு வெறும் 22 மாதங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அசாம், பிகார், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு தூய்மையான தண்ணீரை வழங்குவதன் மூலம் ஜப்பானிய மூளை அழற்சி - தீவிர மூளை அழற்சி நோயின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஜல் ஜீவன் இயக்கம் குறிப்பிடத்தகுந்த அளவு வலுவூட்டியுள்ளது.

2019 ஆகஸ்ட் 15 அன்று ஜல் ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்டபோது, ஐந்து மாநிலங்களில் உள்ள ஜப்பானிய மூளை அழற்சி - தீவிர மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 61 மாவட்டங்களில் வெறும் 8.02 லட்சம் (2.67 சதவீதம்) வீடுகளுக்கே குழாய் இணைப்பு இருந்தது

கடந்த 22 மாதங்களில், இந்த மாவட்டங்களில் உள்ள 97.41 லட்சம் வீடுகளுக்கு கூடுதலாக குழாய் தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஜப்பானிய மூளை அழற்சி - தீவிர மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1.05 கோடி (35 சதவீதம்) வீடுகளில் தற்போது குழாய் தண்ணீர் இணைப்புகள் உள்ளன.

ஜல் ஜீவன் திட்டத்தின் மொத்த நிதியில் 0.5 சதவீதம் ஜப்பானிய மூளை அழற்சி - தீவிர மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குழாய் தண்ணீர் இணைப்புகள் வழங்க ஒதுக்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டில் மேற்கண்ட ஐந்து மாநிலங்களுக்கு ஜப்பானிய மூளை அழற்சி - தீவிர மூளை அழற்சி நோய்க்கான ஒதுக்கீடாக ரூ 462.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாநிலங்களின் முதல்வர்களுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் எழுதியுள்ள கடிதங்களில், ஜப்பானிய மூளை அழற்சி - தீவிர மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், பட்டியல் பிரிவு/பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களிலும் மற்றும் தண்ணீரின் தரம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் தூய்மையான குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734397

----



(Release ID: 1734443) Visitor Counter : 216


Read this release in: Telugu , English , Urdu , Hindi